<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு


பிப்ரவரி 2, 2000 : முந்தைய ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அனுமதிக்கப்பட்ட வரம்புகளை மீறி கொடைக்கானலில் 7 தளங்கள் கொண்ட கட்டிடத்துக்கு அனுமதி வழங்கியதை அடுத்து தொடரப்பட்ட ப்ளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கின் தீர்ப்பு. ஜெயலலிதாவும் கோர்ட்டுக்கு வந்திருக்கிறார். சிறப்பு நீதிபதி-2 ராதாகிருஷ்ணன், ஜெயலலிதாவுக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை அளித்து தீர்ப்பளிக்கிறார். ஒரு முன்னாள் முதல்வருக்கு கடுங்காவல் தண்டனை அநேகமாக அதுதான் முதல்முறை என்று சொல்லப்பட்டது.

சுற்றுலா முடிந்து கோவை திரும்பிக்கொண்டிருந்த வேளாண் பல்கலைக்கழக மாணவ மாணவியர் பயணம் செய்த பேருந்துகள் தர்மபுரி வந்த போது ஏற்கனவே களேபரம் ஆரம்பமாகியிருந்தது. தர்மபுரியில் எந்த அரசியல் நிகழ்வுகளுக்கும் முதல் பலி பேருந்துகள். கல்லெறிதலில் இருந்து மொத்தமாக எரிப்பது வரை நிகழ்வுகளின் தாக்கத்தை பொருத்து விளைவுகள் இருக்கும்.

+ பக்கத்தில் இருந்த பெட்ரோல் பங்க் ஒன்றில் பேருந்துகளை நிறுத்தி விட்டு ஆசிரியர்கள் தங்கள் தலைமைக்கு நிலைமையின் விபரீதத்தை சொல்லி கருத்து கேட்டதாக சொல்லப்படுகிறது. அவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு வண்டியை கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். பேருந்துகள் இருந்த பெட்ரோல் பங்கிலிருந்து கலெக்டர் அலுவலக (பக்கத்திலேயே எஸ்.பி. அலுவலகம்) திடலுக்கு செல்வது பாதுகாப்புக்கு நல்லது என்பது இவர்கள் எண்ணம். இரண்டுக்கும் இடையேயான தூரம் 4 கி.மீக்கும் கம்மி.

பேருந்து இலக்கியம்பட்டி என்ற இடத்திற்கு அருகில் வரும்போது road block. அங்கே அதிமுக புள்ளி ராஜேந்திரன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட அனைத்து வாகனங்களும் ரோட்டில் நிறுத்தப்பட்டிருக்கின்றன. இவர்கள் வந்த வாகனங்களும் ஒரு புளியமரத்தின் கீழ் நிறுத்தப்படுகிறது. சில மாணவர்கள் என்ன நடக்கிறது என்பதை அறிய கீழே செல்கின்றனர். சுமார் 20 மாணவிகள் மட்டும் பேருந்துக்குள்ளேயே இருக்கின்றனர். கல்வீச்சுக்கு பயந்து அனைத்து ஜன்னல்களும் அடைக்கப்படுகிறது.

அப்பொழுது இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர்(மூவர்?) ஏற்கனவே தயாராக கையில் இருந்த பெட்ரோலை பஸ்ஸின் முன்பகுதியில் ஊற்றி தீ வைத்துவிட்டு இரு பெட்ரோல் பாம்களையும் பேருந்துக்குள் வீசுகின்றனர். பஸ்ஸிலிருந்து புகை வருவதை கண்ட மாணவர்கள் ஓடி வருகின்றனர். அக்கம்பக்கம் இருந்த பொது மக்கள் கையில் கிடைத்த வாளிகளில் தண்ணீர் கொண்டு வந்து தீயை அணைக்க முயற்சிக்கின்றனர். தீயணைப்பு வண்டிகள் ஏற்கனவே வேறு இடங்களில் பணியில் இருக்கின்றன. ராஜேந்திரனின் போராட்டம் என்றால் சரக்கு இருக்கும் என்பதால் - சன் டிவி அந்நேரத்தில் அங்கு இருந்தது அப்படித்தான் - அங்கு கூடியிருந்த நிருபர்களில் ஒருவர் அந்த வழியாக சென்ற ஒரு போலீஸ் ஜீப்பை உதவிக்கு அழைக்கிறார். ஜீப்பில் இருந்த வந்த பதில் : இதில் வயர்லெஸ் இல்லை, நான் சென்று உதவி அனுப்புகிறேன்.

ஏறிய வழியிலேயே இறங்கி பழக்கப்பட்ட இயல்பில் பஸ்ஸின் முன்புற வாயிலாக வெளியேற முயற்சிக்க, அதற்கு முன்பே பெட்ரோலால் நனைக்கப்பட்ட முன்புறம் நன்றாக எரிய ஆரம்பிக்கிறது. மாணவிகள் மூடப்பட்ட ஜன்னல்களால் ஏற்பட்ட புகை மூட்டத்தில் மூச்சு திணறுகின்றனர். பேருந்தின் கடைசி இருக்கையில் லக்கேஜ்களால் நிறப்பப்பட்டிருக்கிறது. பின்புற படிக்கட்டுகளில் நெஞ்சு வரை இருந்த கதவு பூட்டப்பட்டிருக்கிறது. பதட்டத்தில் சாவி எங்கே என்றே யாருக்கும் தெரியவில்லை. சில மாணவர்கள் பின்புற படிக்கட்டு கதவின் மேற்புற வழியாக சென்று மாணவிகளை இழுத்து வெளியே போடுகிறார்கள். இந்த மாணவர்களுக்கும் புகை மூட்டத்தில் மூச்சு திணறுகிறது. அவர்களை வெளியே வந்துவிடுமாறு எல்லாரும் கத்த அரை மனசாக வெளியே குதிக்கிறார்கள். அனைவரின் கண் முன்னாலும் சென்னையை சேர்ந்த ஹேமலதா, விருத்தாசலத்தை சேர்ந்த காயத்ரி, நாமக்கல்லை சேர்ந்த கோகிலவாணி மூவரையும் நெருப்பு காவு கொள்கிறது.

அனைவரும் வெளியேறிக்கொண்டிருந்த நிலையில் இவர்கள் மூவரும் தங்கள் லக்கேஜ்களை எடுக்க முயற்சித்து சில விநாடிகள் தாமதித்துவிட்டனர் என்ற ஒரு பார்வையாளர் அதை விதி என்று சொந்து கொள்கிறார். விதியின் வேறு ரூபங்கள்: தர்மபுரி மாவட்ட அரசு பேருந்துகளை போலவே பச்சை வண்ணத்தில் இருந்த அந்த கல்லூரியின் பேருந்தை தனியார் பேருந்து என்று கூட இனம் காண இயலாத அளவு அந்த குடிகாரர்களின் அறிவு ; எப்போதும் எரிக்கும் முன்னர் இறக்கிவிட்டு செய்யும் செயலை அன்று பார்த்து செய்ய தோணாதது ; பின்புற படிக்கட்டு கதவு பூட்டப்பட்டு சாவி இல்லாதது.

தர்மபுரி SP கந்தசாமி தமது அறிக்கையில் "மது , நெடு என்ற அதிமுகவை சேர்ந்த இருவர்தான் இரு சக்கர வாகனத்தில் வந்து பெட்ரோல் பாம்களை வீசியது என்பது விசாரணையில் தெரிகிறது. முதல் தகவல் அறிக்கையில் அவர்கள் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது. குற்றம் சாட்டப்பட்ட 20 பேரும் அதிமுகவை சேர்ந்தவர்கள். ஐந்து பேர் இதுவரை கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மாவட்டத்தை விட்டே காணாமல் போன மீதி குற்றவாளிகளை தேடி வருகிறோம்" என்கிறார்.

இந்த சம்பவத்திற்கும் தங்கள் கட்சிக்காரர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிறார் ஜெயலலிதா. இச்செயல் நடந்த போது சன் டி.வி. கேமரா குழு சரியாக அங்கிருந்தது எப்படி என்று சந்தேகம் எழுப்பிய அவர், இதை திமுகவை சேர்ந்த சமூக விரோதிகள் செய்துவிட்டு பழியை தம்மீது போடுவதாகவும், வேண்டுமென்றே தங்களை குற்றம்சாட்டும் நாளிதழ்களின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும், இச்சம்பவத்தை CBI கொண்டு விசாரிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறார்.

CBI விசாரணையை நிராகரிக்கும் முதல்வர் கருணாநிதி குற்றப்புலனாய்வு CB-CID வசம் இவ்வழக்கு ஒப்படைக்கப்படுவதாக பிப்.4 அன்று தெரிவிக்கிறார். மாணவ் மாணவியரின் கொந்தளிப்பை நீர்க்கச்செய்யும் விதமாக அன்றும் பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இறந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு 2 லட்ச ரூபாய்கள் நிவாரணம் வழங்கி ஆணை பிறப்பிக்கிறது. நிவாரணத்தொகை செக்கில் கையெழுத்து வாங்க வந்தபோது "என் மகளுக்கு விலை 2 லட்சம்... கடவுளே அவள் முகத்தை கூட பார்க்க முடியவில்லையே, இதற்கா அவளை பெத்தேன்" என்ற ஹேமலதாவின் தாய் காசி அம்மாளின் அழுகை கூடியிருந்த அனைவரையும் கலங்க வைக்கிறது.

*

பிப்ரவரி 10, 2000 : ஜெயலலிதாவிற்கு சிறப்பு நீதிமன்றம் அளித்த சிறை தண்டனைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. 2000 ரூபாய் ஒரு நபர் ஜாமீன் + அதே தொகைக்கு இரு நபர் ஜாமீனில் ஜெயலலிதா விடுவிக்கப்படுகிறார்.

*

நவம்பர் 5, 2001 : கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் வழக்கு தொடங்குகிறது. 386 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்படுகின்றனர்.

*

நவம்பர் 14,2001 : சம்பவத்தில் இறந்த கோகிலவாணியின் தந்தை வீராசாமி, பஸ் எரிப்பு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டுமென்றும், வழக்கை கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் இருந்து விடுவித்து கோவையின் ஏதாவது நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து உயர்நீதிமன்றத்தில் மனு செய்கிறார். குற்றத்தை பதிவு செய்த விருப்பாட்சிபுரம் கிராம நிர்வாக அலுவலர் ராமசுந்தரம் உட்பட அரசு தரப்பு சாட்சியாக விசாரிக்கப்பட்ட 22 பேருமே பல்டி அடித்து சாட்சியம் அளித்ததையும், அந்த பேருந்தில் பயணம் செய்த 6 பேர் மட்டுமே மீதம் விசாரிக்கப்பட இருக்கும் நிலையில், குற்றம் சாட்டப்பட்ட 31 பேரும் செல்வாக்கான லோக்கல் அதிமுக பிரமுகர்கள் என்ற நிலையில் வழக்கு விசாரணை பாதிக்கப்படும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என்று தனது மனுவில் சுட்டிக்காட்டுகீறார். நீதிபதி டி.பி.தினகரன் இம்மனுவை ஏற்று மீள் அறிவிப்பு வரும் வரை இவ்வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கிறார்.

*

நவம்பர் 27, 2000 : கைது செய்யப்பட்டவர்களில் 4 பேருக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.

*

செப்டம்பர் 12, 2003 : சம்பவத்தில் இறந்த கோகிலவாணியின் தந்தை வீராசாமி, வழக்கை மாற்றக்கோரி சென்னை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நீதிபதி வி.கனகராஜ் தலைமையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. வீராசாமியின் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்கிறது என்பதையும், முக்கியத்துவம் வாய்ந்த இவ்வழக்கில் அரசு தரப்பு எல்லா வகையிலும் மெத்தனம் காட்டுகிறது என்பதையும் குறிப்பிட்ட நீதிபதி, அதுவரை சாட்சியம் சொன்ன 22 சாட்சிகளும் பல்டி அடித்ததையும், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் அதிமுக என்ற ஒரே காரணத்தால் அரசு காட்டும் அலட்சியம் வெட்கப்படக்கூடியது என்றும் சுட்டிக்காட்டுகிறார். "இந்த அமைப்பை ஏமாற்றி பதவியில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வண்ணம் நடப்பது நல்லது என்று இவ்வழக்குக்கு பொறுப்பான அதிகாரிகள் நினைப்பார்களேயானால் அவர்கள் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. சட்டம் தம் கரங்களை நீட்டும் போது அனைவரும் பதில் சொல்ல வேண்டி வரும்"

இவ்வழக்கில் சாட்சியங்கள் கலைக்கப்பட்டதை பொறுப்பற்ற முறையில் பார்த்துக்கொண்டிருந்த கூடுதல் SP மீது நடவடிக்கை எடுக்குமாறு CB-CID IGயை உத்தரவிடும் அவர், பொய்யான ஆவணங்களில் கையெழுத்திட்டது மற்றும் போலி சாட்சியம் அளித்தது ஆகியவற்றுக்காக (பல்டியடித்த) விருப்பாட்சிபுரம் கிராம நிர்வாக அலுவலர் ராமசுந்தரம் மற்றும் அவர் உதவியாளர் சாமுண்டி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தர்மபுரி கலெக்டரையும் அதே காரணங்களுக்காக அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்குமாறு SPக்கும் பரிந்துரைக்கிறார். சேலம் நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்றி உத்தரவிடும் நீதிபதி வி.கனகராஜ், இவ்வழக்கு முதலில் இருந்து மீண்டும் விசாரிக்கப்பட வேண்டும், ஐ.ஜி. வழக்கை கண்காணிக்க வேண்டும், வழக்கை சீக்கிரம் நடத்த வேண்டி ஏற்கனவே இருக்கும் சிறப்பு பப்ளிக் ப்ராஸிக்யூட்டர் மாற்றப்பட்டு வேறொரு சிறப்பு பப்ளிக் ப்ராஸிக்யூட்டர் நியமிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளிக்கிறார்.

*

டிசம்பர் 12, 2003 : வழக்கு மாற்றத்தின் தீர்ப்பின் போது கூறிய சில கருத்துக்களை பதிவுகளிலிருந்து நீக்க வேண்டும் என்று கூடுதல் SP மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோர் செய்த விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. வழக்கு டிசம்பர் 30ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. அதற்கு பிறகு இவ்வழக்கு விசாரணை பற்றி தகவல் இல்லை

*

பிப்ரவரி 18, 2005 : சேலத்துக்கு வழக்கை மாற்றக்கோரி கோர்ட் தீர்ப்பளித்தும் 15 மாதங்களாக அதற்கான பணிகள் எதுவும் நடைபெறாமல் தனக்கு நீதி மறுக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டுடன் வீராசாமி மீண்டும் சென்னை உயர்நீதி மன்றத்தை அணுகி கோர்ட் அவமதிப்பு வழக்கு மனு ஒன்றை பதிகிறார். இதற்கிடையில் CB-CID கூடுதல் எஸ்.பி ராஜேந்திரன், கருத்தை நீக்கும் வழக்கு (டிசம்பர் 30 2003) சம்பந்தப்பட்ட ஆவணங்கள் "காணாமல்" போய்விட்டதாகவும், அந்த சம்பந்தப்பட்ட ஆவணங்களை மீண்டும் உருவாக்க அனுமதி அளிக்குமாறும் அதுவரை மேற்கொண்டு இது சம்பந்தமாக விசாரிக்கக்கூடாது என்றும் நீதிபதிக்கு விண்ணப்பிக்கிறார். நீதிபதி, ஆவணங்கள் காணாமல் போனது குறித்து முறையான விளக்கம் பிப்ரவரி 21க்குள் அளிக்குமாறு ப்ராஸிக்யூட்டருக்கு உத்தரவிடுகிறார். மறுநாளே, காணாமல் போன ஆவணங்கள் கோர்ட்டின் ஆங்கில பதிவறையில் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்தி வெளியாகிறது.

*

பிப்ரவரி 24, 2005 : வீராசாமியின் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மூன்று IAS அதிகாரிகள், அப்போதைய உள்துறை மந்திரி, வழக்கு மாற்றம் தீர்ப்பு வெளியானபோது பதவியில் இருந்த இரண்டு முன்னாள் உள்துறை மந்திரிகள் ஆகியோர் மீது, சிறப்பு ப்ராஸிக்யூட்டர் நியமனம் மற்றும் நீதிமன்ற மாற்றம் குறித்து பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டதற்கு விளக்கம் கேட்டு affidavit தாக்கல் செய்ய சொல்கிறார். கடுமையான தனது கண்டனத்தையும் அதிருப்தியையும் தெரிவிக்கும் நீதிபதி வி.கனகராஜ் "உங்கள் மீது ஏன் கோர்ட் அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளக்கூடாது? உங்கள் நடத்தையை விளக்க முடியுமா? பணிக்காலத்தில் என்னதான் செய்கிறீர்கள்?" போன்ற கேள்விகளை கேட்கிறார்.

மேலும் அரசு தரப்புக்கு பாதகமாக இரண்டாவது வாக்குமூலம் கொடுத்த கூடுதல் SP ஒருவரின் நடவடிக்கையையையும் கடுமையாக விமர்சிக்கிறார். "குற்றவாளிகளுக்கு சாதகமாக இருக்கும் வண்ணம் கூடுதல் SP தனது வாக்குமூலத்தை வேண்டுமென்றே இரண்டாவது முறையாக மாற்றி அளிக்கிறார். இவருக்கு பொது மக்களின் வரிப்பணம் சம்பளமாக தரப்படுகிறது. ஆனால் அரசுத்தரப்புக்கு பலவீனப்படுத்தும் நோக்கில் அமைகிறது இவரின் வாக்குமூலம்"

கூடுதல் SPக்கு மெமோ அனுப்பப்பட்டிருப்பதாக அட்வகேட்-ஜெனரல் N.R.சந்திரன் கோர்ட்டுக்கு தெரிவிக்கிறார். சிறப்பு ப்ராஸிக்யூட்டராக சீனிவாசன் நியமிக்கப்பட்ட அரசு கெஜட் நகலும் கோர்ட்டுக்கு அளிக்கப்படுகிறது.

*

ஜீன் 5, 2005 : 40 நாட்களுக்கு பின் சேலம் நீதிமன்றத்தில் நீதிபதி கிருஷ்ணராஜா முன்னிலையில் பஸ் எரிப்பு வழக்கு விசாரணை மீண்டும் தொடங்குகிறது. கோகிலவாணியின் சகோதரர் தனது சாட்சியத்தில் நகையை மட்டும் வைத்து தனது தமக்கையின் உடலை அடையாளம் காட்டியதை கலங்கிய குரலில் விவரிக்கிறார். தருமபுரி அரசு மருத்துவர்கள் டாக்டர். நடராஜன், டாக்டர். சம்பத் ஆகியோர் சாட்சியம் அளிக்கின்றனர். குறுக்கு விசாரணையின் போது நீதிபதி, டாக்டர் சம்பத்தை பார்த்து சம்மனை கவனமாக படித்து புரிந்து கொண்டு பதிலளிக்குமாறு அறிவுறுத்துகிறார்.

*

ஜீன் 22, 2005 : சன் டிவி நியூஸ் எடிட்டர் ராஜா பஸ் எரிப்பு கேஸட் தனக்கு அனுப்பப்பட்டது, அதை ஒளிபரப்பியது, ஒரு மாதத்திற்கு பிறகு CID கேட்டுக்கொண்டதற்கிணங்க அதனை ஒப்படைத்தது என்று தனது சாட்சியத்தை அளிக்கிறார்.

*

ஜனவரி 10, 2006 : இவ்வழக்கின் கடைசி சாட்சியிடம் சேலம் நீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது. இந்த வழக்கில் மொத்தம் உள்ள 386 சாட்சிகளில், 123 சாட்சிகளை மட்டும் மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் முடிவு செய்து, அதன்படி 122 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில் கடைசி சாட்சியாக, சம்பவம் நடந்த நான்கு நாட்களுக்கு பின் லோக்கல் காவல்துறையினரிடமிருந்து இவ்வழக்கை ஏற்றுக்கொண்ட இவ்வழக்கின் CB-CID முதன்மை விசாரணை அதிகாரியான சமுத்ரபாண்டியன், நீதிபதி கிருஷ்ண ராஜா முன் சாட்சியம் அளிக்கிறார்.

இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை பிப்ரவரி மாதம் 18ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைக்கிறார். பிப்ரவரி 18 அன்றும் சமுத்திரப்பாண்டியன் சாட்சியம் அளிக்கிறார். இதைத் தொடர்ந்து இரு தரப்பு வக்கீல்களின் வாதம் நடைபெறும்.

*

பிப்ரவரி 16, 2007 : தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளான ரவீந்திரன், முனியப்பன், நெடுஞ்செழியன் ஆகியோருக்கு தூக்கு தண்டனையும் மற்ற 25 பேருக்கு 7 ஆண்டு 3 மாதம் சிறை தண்டனை மற்றும் 13 ஆயிரம் ரூபாய் அபராதமும் வழங்கி சேலம் கோர்ட் தீர்ப்பளித்தது.

**

குறிப்பு :

1. இவ்வழக்கை ஒரே இடத்தில் ஆவணப்படுத்தும் நோக்கில் பல்வேறு பத்திரிக்கைகளில் வந்த செய்திகளின் அடிப்படையில் எழுதப்பட்டது. மேலதிக தகவல்களோ, இப்பதிவில் பிழைகளோ இருப்பின் தயவு செய்து சுட்டவும். (+ குறிப்பிட்ட பத்தியில் உள்ள செய்தி மட்டும் உறுதிப்படுத்தப்படாதது. )

2. தேகளில் துல்லியம் இல்லாமல் இருக்கலாம். எனினும் சம்பவங்கள் கால அடிப்படையில் வரிசையாகவே தொகுக்கப்பட்டுள்ளன.

3. இது முழுமையானது அல்ல. மேலும் கிடைக்கப்பெறும்போது தகவல்களின் அடிப்படையில் இப்பதிவு நீளும்/ சுருங்கும்/ திருத்தப்படும்.


மேலும் தொடர்ச்சி



š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


1. DMK went to courts to move cases against Jayalalitha out of Tamil Nadu. Court agreed to such a request.

2. Jeyendrar supporters (and many prominent members of BJP) voiced for moving the murder case against the seer outside Tamil Nadu. The court agreed to such a request.

(2a). I remember only about the two instances mentioned above now. If there are other instances by other political parties, please fill them up in here... :-)

3. Why no opposition party in Tamil Nadu (including communists) have not made such a demand or agitated for moving this particular case outside Tamil Nadu. (I dont want lip service comments made by some on this regard. Have any party taken constructive steps to do this continuously).

4. Now a suggestion - why not bloggers join together and fight making a court outside Tamil Nadu look into this case. If such a step is taken by bloggers, count my support for the same.

5. Finally,I see mugamoodi is being targeted as one who is soft on AIADMK/BJP and hard on DMK/DK..
Taking that into account, this post proves that Mugamoodi could criticise any party as harshly as he criticises other parties. Others who directly/indirectly support other parties in their writings should ask themselves whether they are ATLEAST (IF not better than) as fair as mugamoodi. :-)

Thanks and regards, PK Sivakumar
 



Mugamoodi,
Thanks for chronological details of the incident. To say that it is distressing can only be an understatement :-(

I guess Justice Kanagaraj has retired recently. I hope someone with his moral stature brings the criminals, police, bureaucrats and their political bosses to justice.
 



//Taking that into account, this post proves that Mugamoodi could criticise any party as harshly as he criticises other parties. Others who directly/indirectly support other parties in their writings should ask themselves whether they are ATLEAST (IF not better than) as fair as mugamoodi. :-)//

PKS,
It is one thing to criticize criminal activities of any political party and totally different thing to talk in support of or against the political activities and ideological aspects (including killings of Gandhi, Indira and Rajiv. There are people justifying or condemning these killings from their political standpoints). To mix them both is inappropriate.

Mugamoodi's real face may be masked but his political biases are quite transparent :-). Irrespective my political biases I would join Mugamoodi and you in situations like this, but differ on political issues.
 



தொகுப்புக்கு நன்றி.
 



முகமூடி,
நல்ல தொகுப்பு. படிக்கும்போதே மனது மிகவும் விசனத்துக்குள்ளானது. சம்பந்தப்பட்டவர்களின் துயரத்தை சொல்லில் வடிக்க முடியாது. நம் நாட்டில் நீதி எவ்வளவு கேலிக்குரியதாகிவிட்டது என்பதைத்தான் இவ்வழக்கு காட்டுகிறது. உண்மையில் இந்தியா ஜனநாயக நாடுதானா என்ற கேள்வி எழுவதற்கு இது போன்ற நிகழ்வுகள் காரணமாகிவிடுகின்றன. ஆட்சியில் இருந்தால் எதுவும் செய்யலாம் என்கிற அகம்பாவத்தையும் அதிகாரத்தையும் தருகிற நம் அரசியல் அமைப்பு மீது நம்பிக்கை குறைந்து கொண்டேதான் வருகிறது.
 



கோயம்புத்தூரில் வெடித்த குண்டுகளால் சுமார் 50க்கும் மேற்பட்ட இந்துக்கள் கொல்லப்பட்டார்கள். அவர்கள் பெயராவது யாருக்காவது தெரியுமா?

http://ennamopo.blogsome.com
வாழ்க உங்கள் நடுநிலை நாளேடு!
 



முகமூடியாரே,

தொகுத்து வழங்கிய உங்கள் செயலை பாராட்டுகிறேன்.
 



அன்றைய தின தலைப்புச்செய்திகளில் பணம் பண்ணும் மீடியாக்கள், எது நடந்தாலும் பதவி விலகக்கோரும் அரசியல்வாதிகள்... இதில் மாற்றம் கொண்டுவர நம் அனைவரும் நினைத்தால் மட்டுமே முடியும், வெறும் பெருமூச்சோ, குறைகூறுதலோடு இவை ஓழிந்துவிடப்போவதில்லை...
 



இது மறந்துபோகக்கூடிய பிரச்சனை அல்ல. ஆவணப்படுத்தியதற்கு நன்றி.
 



உண்மை தான்
எவ்வளவு கொடுமை கோகிலவாணியின் வகுப்புத்தோழன் என் தம்பியின் பள்ளித்தோழன், அவன் அந்த சம்பவத்திற்கப்புறம் வந்து எங்களிடம் கதறி அழுதது இன்னும் கண்ணில் இருக்கின்றது...:(
 



http://thinnai.com/chinn5.html
 



இந்த வாரம் ஜூனியர் விகடனில் நெருங்கும் தீர்ப்பு... தகிக்கும் தர்மபுரி! ::

நினைவுகளின் பதிவேட்டிலிருந்து அந்த நாளை மறந்துவிடவே முடியாது. அந்த நாள் 2.2.2000.

கொடைக்கானல் பிளஸண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் ஜெய லலிதாவுக்கு சிறப்பு நீதிமன்றம் சிறைத் தண்டனை வழங்கியதும், அன்று தமிழகம் முழுக்க வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டனர் அ.தி.மு.க&வினர். தர்மபுரியில் சாலை மறியல்களும் கல்வீச்சு சம்பவங்களும் அரங்கேறிக் கொண்டிருந்தன. அப்போது சுற்றுலா வந்த கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவிகள் கோவைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பேருந்தை தர்புரியில் வழிமறித்த ஒரு கும்பல், பெட்ரோலை ஊற்றி தீவைக்க... பஸ் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. பஸ்ஸ§க்குள் இருந்த மாணவிகள் பதறியடித்துக்கொண்டு கீழே இறங்க... கோகில வாணி, ஹேமலதா, காயத்ரி ஆகிய மூன்று மாணவிகள் மட்டும் பஸ்சுஸ§க்குள்ளேயே தீயின் கோரப்பிடியில் சிக்கி உயிரோடு எரிந்து கரிக்கட்டையானார்கள்.

இந்த சம்பவத்தில் அ.தி.மு.க&வினர் 31 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் நடந்து வந்த அந்த வழக்கில், ‘‘சாட்சிகள் மிரட்டப்படுகிறார்கள். எனவே வேறு நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்ற வேண்டும்’’ என இறந்துபோன மாணவி கோகிலவாணியின் அப்பா வீராசாமி உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். ஆகவே, 2003&ம் ஆண்டு இந்த வழக்கு சேலம் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. மொத்தமாக இதுவரை 125 சாட்சிகள் இவ்வழக்கில் விசாரிக்கப்பட்டுள்ளனர். சாட்சிகள் அனைவரின் விசாரணையும் முடிந்து விட்டது. இம்மாத இறுதியிலோ பிப்ரவரி முதல் வாரத்திலோ இவ்வழக்கில் தீர்ப்பு சொல்லப்பட்டுவிடும்.

கடந்த 5&ம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, குற்றம்சாட்டப்பட்டவர்களின் தரப்பு வழக்கறிஞர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரவிச்சந்திரன் வாய்தா கேட்டார். இதனால் கோபமான நீதிபதி கிருஷ்ணராஜா, ‘‘எதுக்கு வாய்தா கேட்டுக்கிட்டே இருக்கீங்க.. ஏதாவது ஜோசியம் பார்க்க போறீங்களா..? இனிமேல் வாய்தா வெல்லாம் கொடுக்க முடியாது. 12&ம் தேதி ஆஜராக வேண்டும்’’ என கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்.

அரசு தரப்பு வழக்கறிஞராக இவ்வழக்கில் வாதாடிய சேலத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் சீனிவாசனைச் சந்தித்தோம். ‘‘இந்த கேஸ்ல ஆஜரானதுல இருந்தே எனக்கு மிரட்டல்கள் வந்துகிட்டே இருந்துச்சி. நான் அதைப்பத்தியெல்லாம் கவலைப்படவே இல்ல. சம்பவம் நடந்த இடத்துல எடுக்கப்பட்ட வீடியோவை பலமுறை போட்டுப் பார்த்தேன். அதுக்குப் பிறகு பலநாள் என்னால் தூங்க முடியவில்லை. இந்த வழக்குல முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்கிறவர் ராஜேந்திரன். இவர் சம்பவம் நடந்தபோது தர்மபுரி அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளரா இருந்தவரு. நெடுஞ்செழியன், மாது என்கிற ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூணு பேரும் 2, 3, 4&வது குற்றவாளிகள். இவங்க மூணு பேரும்தான் பைக்ல பாரதிபுரம் ஏரியாவுல இருந்த மெஜஸ்டிக் ஆட்டோ ஒர்க் ஷாப்புக்குப் போனவங்க. அந்தக் கடையில வேலை பார்க்கிற பையன் கிட்ட பணத்தைக் கொடுத்து கேன்ல பெட்ரோல் வாங் கிட்டு வரச் சொன்னவங்க. இவங்க பெட்ரோலை பஸ்ஸை சுத்தித் தெளிச்சிட்டுருக்கப்ப, ‘நாங்க எல்லோரும் இறங்கிக்கிறோம். அப்புறம் பஸ்ஸைக் கொளுத்துங்க’னு பஸ்ஸ§குள்ள இருந்த புரபஸர் கெஞ்சிருக்காங்க. ஆனா, இரண்டாவது எதிரி நெடுஞ்செழியன் அதைக் கொஞ்சமும் காதுல வாங்கிக்காம தீ வச்சிட்டாரு. இதை, அந்த பஸ்ல வந்த மாணவிகள் சாட்சி சொல்லியிருக்காங்க. பெட்ரோலை தெளிச்சது, தீ வச்சதுன்னு மூணு பேரையும் மாணவிகள் தெளிவா அடையாளம் காட்டிட்டாங்க. அதனால அந்த மூணு பேரும்தான் இந்த விஷயத்துல நேரடியா சம்பந்தப்பட்டிருக்காங்க. மத்தவுங்க எல்லாம் இந்தக் கலவரத்துல மறைமுகமா சம்பந்தப்பட்டவுங்க. இந்த வழக் குல நாங்க விசாரிச்ச சாட்சிகள் எல்லாரும் தெளிவாக சாட்சி சொல்லிருக்காங்க. அதனால குற்றவாளிகளுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும்னு நம்பிக்கை இருக்கு. என் வேலையை மன சாட்சிப்படி திருப்தியா செஞ்சி முடிச்சிட்டேன். அதுக்கு மேல ஆண்டவன் இருக்கான்’’ என கைகளை மேலே உயர்த்தினார்.

இவ்வழக்கில் முதல் குற்றவாளி ராஜேந்திரன் மற்றும் ஐந்தாவது குற்றாவாளியிலிருந்து 31&வது குற்றவாளி வரை அனைவருக்கும் சேலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பார்த்தசாரதி ஆஜராகியிருக்கிறார். ஜெயேந்திரர் வழக்கில் விஜயேந்திரர் மற்றும் ரகுவுக்காக ஆஜராகியிருப்பவரும் இவர்தான். தா.கிருட்டிணன் கொலை வழக்கில் அழகிரிக்காகவும் பார்த்தசாரதி ஆஜராகியிருக்கிறார். ஜெயேந்திரர் வழக்கில் பார்த்தசாரதி பிஸியாக இருப்பதால், அவரது ஜூனியர் எஸ்.ஆர்.ரவிச்சந்திரன் நம்மிடம் பேசினார். ‘‘ஜெயலலிதாவுக்கு தண்டனை கொடுத்துத் தீர்ப்பு வந்ததும், அந்தத் தீர்ப்புக்கு தங்களோட எதிர்ப்பைக் காட்ட அவுங்க கட்சிக்காரங்க சாலை மறியல் செய்தாங்க. மத்தபடி மூன்று மாணவிகளை கொலை செய்யணும்ங்கிறது அவுங்க நோக்கம் கிடையாது. அதைத்தான் எங்க தரப்பு வாதமாக எடுத்து வச்சிருக்கோம். அது மட்டுமில்லாம, சம்பவம் நடந்து இருபது நாள் கழிச்சி அடையாள அணிவகுப்பு நடத்துறாங்க. அதுக்குள்ள இந்த வழக்குல சம்பந்தப் பட்டவுங்க போட்டோ எல்லாமே பேப்பர்ல வந்துடுச்சு. அதை மனசுல வச்சிக்கிட்டுக்கூட மாணவிகள் அடையாளம் காட்டியிருக்கலாம். எங்களோட வாதம் என்னன்னா, அ.தி.மு.க&வினர் சாலை மறியல் செய்ததைப் பயன்படுத்தி சில சமூகவிரோதிகள் பஸ்ஸ§க்கு நெருப்பு வச்சிட்டாங்க. போலீஸ்ல இதை கச்சிதமா ஜோடிச்சி அ.தி.மு.க&வினர்தான் இதை செஞ்சாங்கன்னு வழக்குப்பதிவு பண்ணிட்டாங்க. அதைத்தான் நாங்க இப்பவும் கோர்ட்ல வாதாடிட்டு இருக்கோம். மொத்தத்துல மாணவிகள் எரிக்கப்பட்ட சம்பவம் திட்டமிட்டு நடந்த செயல் இல்லை என தீர்மானிச்சி, அவுங்க எல்லோரையும் விடுதலை செய்யணும் என்பதுதான் எங்களோட வாதம்’’ என்றார்.

முக்கிய குற்றவாளிகள் என அடையாளம் காட்டப்பட்ட நெடுஞ்செழியன், ரவீந் திரன், முனியப்பன் ஆகி யோருக்காக ஆஜராகி இருக்கும் வழக்கறிஞர், சென்னையைச் சேர்ந்த எம்.எஸ்.கந்தசாமி. கடந்த ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தா.கிருட்டிணன் கொலை வழக்கு மற்றும் ஜெயேந்திரர் வழக்கு ஆகியவற்றில் அரசு தரப்பு வழக்கறிஞராக ஆஜரான எம்.எஸ்.கந்தசாமி, ஆட்சி மாறியதும் அரசு வழக்கறிஞர் பணியை ராஜினாமா செய்து விட்டார். அவரது வாதங்கள் எல்லாமே இவ்வழக்கில் முடிந்து விட்டன.

தமிழக மக்கள் மனதைப் பொசுக்கிய இந்தக் கோர வழக்கில் நீதிபதி கிருஷ்ணராஜா என்ன தீர்ப்பு வழங்கப் போகிறார் என்பதுதான் தமிழக மக்களின் ஆவலான எதிர்பார்ப்பு!
 



"2. தேகளில் துல்லியம் இல்லாமல் இருக்கலாம். எனினும் சம்பவங்கள் கால அடிப்படையில் வரிசையாகவே தொகுக்கப்பட்டுள்ளன."
எப்படி ஐயா துல்லியம் இருக்கும்? நீங்கள் கவனித்திருக்கலாம், நிறைய பேர் தேதியிட்டு கையொப்பம் இடும்போது வெறுமனே 11.01 என்று எழுதி, வருடத்தை விட்டு விடுகின்றனர். கேட்டால் நேரமில்லையாம் இதை எழுதுவதற்கு! பிறகு ஆவணங்களைப் பார்க்கும்போது ஆண்டுக்கணக்கில் உதைக்கும்.

இப்போது இப்பதிவையே எடுத்துக் கொள்ளுங்கள். பின்னூட்டங்களில் தேதியே இல்லை, வெறும் நேரம்தான் உள்ளது. உள்ளே போய் தேதியுடன் பின்னூட்டம் வரும் ஆப்ஷனை க்ளிக் செய்ய உங்களுக்கு நேரம் இல்லை.

அது இருக்கட்டும், இப்போது பதிவின் முக்கிய விஷயத்துக்கு வருவோம். கருணாநிதி முதல் மந்திரியாக இருந்த போது நடந்த நிகழ்ச்சிதானே அது. சட்டுபுட்டென்று வழக்கை ஏன் முடிக்கவில்லை? அதன் பிறகு ஜெ வந்து ஐந்து வருடத்தை தன் சொந்த நலனுக்காக திசை திருப்பியுள்ளார். இப்போது என்ன நடக்கிறது? மறுபடி கருணாநிதி வந்து விட்டாரல்லவா? என்னதான் செய்கிறார்?

அன்புடன்,
டோண்டு ராகவன்
 



மாணவிகள் எரிக்கப்பட்ட வழக்கில் நாளை தீர்ப்பு

பிப்ரவரி 14, 2007

சேலம்: தர்மபுரியில் கோவை வேளாண்மைக் கழக மாணவிகள் பஸ்சோடு சேர்த்து அதிமுகவினரால் எரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது.

கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டலுக்கு விதியை மீறி சலுகை அளித்த ஜெயலலிதாவுக்கு எதிராக ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அந்தத் தீர்ப்பு 2005ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி தீர்ப்பு வெளியானது.

இதையடுத்து மாநிலம் முழுவதும் அதிமுகவினர் அராஜகத்தில் இறங்கினர். வன்முறை தாண்டவமாடினர்.

கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவிகள் தர்மபுரிக்கு பல்கலைக்கழக பஸ்சில் வந்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது அதிமுகவினர் அந்த பஸ்ஸை வழி மறித்தனர்.

உள்ளே மாணவ, மாணவிகள், ஆசிரியைகள் இருப்பதைக் கூட கண்டு கொள்ளாமல் அந்த பஸ்சுக்கு கும்பல் தீ வைத்தது. இதில் கோகிலவாணி (19), ஹேமலதா (19), காயத்ரி (19) ஆகிய மாணவிகள் பஸ்சுக்குள்ளேயே எரிந்து சாம்பலாயினர்.

மேலும் 18 மாணவிகள் பலத்த காயமடைந்தனர். தமிழகத்தை உலுக்கிய இந்த வழக்கை அதிமுக அரசு மிக அலட்சியமாக நடத்தியது. அதிமுகவினரை தப்ப வைக்க போலீசாரும், அரசு வக்கீலும் முயன்றனர்.

இதையடுத்து உயர் நீதிமன்றம் தலையிட்டு அரசை கண்டித்து, வழக்கை தர்மபுரியில் இருந்து சேலத்துக்கு மாற்றியது. அரசு வக்கீலையும் மாற்றியது. ஆனால், அந்த வழக்கறிஞருக்கு போதிய ஆவணங்களைத் தராமல் இழுத்தடித்தனர்.

இதனால் வழக்கு விசாரணை நீண்டு கொண்டே போனது.

இந்த வழக்கில் அதிமுகவினரான நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் நடந்த ஏழு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் நாளை இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுகிறது
 



தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு: 28 அதிமுகவினர் குற்றவாளிகள்!நாளை தண்டனை அறிவிப்பு!! ::

தர்மபுரியில் கோவை வேளாண்மைக் கழக மாணவிகள் பஸ்சோடு சேர்த்து அதிமுகவினரால் எரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 28 பேர் குற்றவாளிகள் என சேலம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவர்களுக்கான தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படும்.


இதில் அதிமுக நிர்வாகிகளான நெடு என்ற நெடுஞ்செழியன், மாது என்ற ரவீந்திரன் மற்றும் முனியப்பன் ஆகிய மூன்று பேர் பஸ்ஸை எரித்ததாகவும், மாணவிகளை கொன்றதாகவும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிருபணமாகி இருப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார். இவர்கள் மீது 3 மாணவிகளை கொலை செய்ததாகவும், மேலும் 46 பேரை (பஸ்சில் இருந்த பிறர்) கொலை செய்ய முயன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டலுக்கு விதியை மீறி சலுகை அளித்த ஜெயலலிதாவுக்கு சென்னை தனி நீதிமன்றம் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து 2000மாவது ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி தீர்ப்பளித்தது. இதையடுத்து மாநிலம் முழுவதும் அதிமுகவினர் அராஜகத்தில் இறங்கினர். வன்முறை தாண்டவமாடினர்.

கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவிகள் தர்மபுரிக்கு பல்கலைக்கழக பஸ்சில் வந்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது இலக்கியம்பட்டி என்ற இடத்தில் அதிமுகவினர் அந்த பஸ்ஸை வழி மறித்தனர்.

உள்ளே மாணவ, மாணவிகள், ஆசிரியைகள் இருப்பதைக் கூட கண்டு கொள்ளாமல் அந்த பஸ் மீது பெட்ரோலை ஊற்றி அந்தக் கும்பல் தீ வைத்தது. இதில் கோகிலவாணி (19), ஹேமலதா (19), காயத்ரி (19) ஆகிய மாணவிகள் பஸ்சுக்குள்ளேயே எரிந்து சாம்பலாயினர். மேலும் 18 மாணவிகள் பலத்த காயமடைந்தனர்.

இந்த தீ வைப்பு தொடர்பாக அப்போதைய தர்மபுரி ஒன்றிய அதிமுக செயலாளர் ராஜேந்திரன், நகர இணைச் செயலாளர் நெடு என்ற நெடுஞ்செழியன், எம்ஜிஆர் இளைஞர் அணி துணைத் தலைவர் மாது என்ற ரவீந்திரன், ஊராட்சி மன்றத் தலைவர் முனியப்பன், அதிமுக நிர்வாகிகளான முருகேசன், வேலாயுதம், முத்து என்ற அறிவழகன், தவுலத் பாஷா, ரவி, முருகன், விபி முருக், சம்பத், நஞ்சன் என்ற நஞ்சப்பன், வடிவேல்,

மணி என்ற கூடலர் மணி, மாது, பழனிச்சாமி, ராஜு, அரசு போக்குவரத்துக் கழக கண்டக்டரும் அதிமுக தொண்டருமான ராமன், சந்திரன், செல்லகுட்டி, காவேரி, மணி, மாதையன், செல்வம், மாதேஸ், மாணிக்கம், உதய குமார், செல்வராஜ், சண்முகம் ஆகிய 31 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் செல்லக்குட்டி இறந்துவிட்டார்.

தமிழகத்தை உலுக்கிய இந்த வழக்கை அதிமுக அரசு மிக அலட்சியமாக நடத்தியது. விசாரணையை சிபிசிஐடி போலீசார் நடத்தினாலும் அதிமுகவினரை தப்ப வைக்க அரசும், போலீசாரும், அரசு வக்கீலும் முயன்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மிக தெனாவட்டாக நீதிமன்றத்தில் நடந்து கொண்டனர்.

மேலும் போலீஸ் மற்றும் அதிமுகவினரின் மிரட்டலால் 20 சாட்சிகள் பல்டி அடித்தனர். (மொத்த சாட்சிகள் 22 பேர்). இதனால் இந்தக் கும்பல் மொத்தமாக வழக்கில் இருந்து தப்பிவிடும் சூழல் ஏற்பட்டது.

இதையடுத்து இறந்த மாணவி கோகிலவாணியின் தந்தை வீராசாமி, வழக்கை கோவைக்கு மாற்றக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். அதை விசாரித்த நீதிபதி கனகராஜ் தமிழக அரசுக்கும் போலீசாருக்கும் கடும் கண்டனம் தெரிவித்தார். அரசு கண் துடைப்பு நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது என்று சாடிய நீதிபதி வழக்கை கிருஷ்ணகிரியில் இருந்து சேலத்துக்கு மாற்றினார்.

மேலும் அரசு வக்கீலையும் மாற்ற உத்தரவிட்டார். ஆனால், நீதிமன்றம் நியமித்த புதிய வழக்கறிஞரான சீனிவாசனுக்கு போதிய ஆவணங்களைத் தராமல் இழுத்தடித்தனர். மேலும் அவருக்கும் கூட மிரட்டல்கள் வந்தன. இதனால் வழக்கு விசாரணை நீண்டு கொண்டே போனது.

சேலம் நீதிமன்றத்தில் கோவை விவசாயக் கல்லூரி துணை வேந்தர், தர்மபுரி கலெக்டர், பஸ்சில் சென்ற ஆசிரியைகள், மாணவிகள் உள்பட 123 சாட்சிகளிடம் விசாரணை நடந்தது. எரிக்கப்பட்டபோது பஸ்சில் இருந்த மாணவிகளும் ஆசிரியைகளும் சாட்சியம் அளித்தபோது, அந்த தீ எரிப்பு சம்பவத்தை நினைவு கூர்ந்தபோது, கதறி அழுதது குறிப்பிட்டத்தக்கது. ஒரு ஆசிரியையும் சில மாணவிகளும் சாட்சியத்தின்போது மயங்கியே விழுந்ததும் குறிப்பிடத்தக்கது.

சம்பவம் நடந்த ஏழு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. சேலம் முதலாவது அமர்வு நீதிபதி கிருஷ்ணராஜா வழங்கிய தீர்ப்பில், மாதேஷ், பழனிச்சாமி தவிர மற்ற 28 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார். இவர்களுக்கான தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படும்.

இவர்கள் மீது சாலை மறியல் செய்தது, பேருந்து கண்ணாடியை உடைத்தது, சட்டவிரோதமாக கூடுவது ஆகிய குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான தண்டனை விவரமும் நாளை அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி அறிவித்தார்.

இப்போது ஜாமீனில் உள்ள ரவீந்திரன், மணியப்பன் இருவரையும் உடனே கைது செய்து போலீஸ் காவலில் வைக்கவும் உத்தரவிட்டார். மேலும் முக்கிய குற்றவாளிகளான நெடு என்ற நெடுஞ்செழியன், மாது என்ற ரவீந்திரன் மற்றும் முனியப்பன் ஆகிய 3 பேரையும் நீதிமன்ற காவலில் வைக்கவும் உத்தரவிட்டார்.

இந்தத் தீர்ப்பயைடுத்து இந்த மூவரும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். அதை உடனடியாக நிராகரித்தார் நீதிபதி. தீர்ப்பையொட்டி சேலம் நீதிமன்ற வளாகத்தில் கமிஷ்னர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மெடல் டிடெக்டர்களும் வைக்கப்பட்டிருந்தன.
 



//இவர்கள் மீது சாலை மறியல் செய்தது, பேருந்து கண்ணாடியை உடைத்தது, சட்டவிரோதமாக கூடுவது ஆகிய குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும்//

முகமூடி,
இவை மட்டும் தானா? கொலைக்குற்றம் இல்லையா?
 



// கொலைக்குற்றம் இல்லையா //

தெரியவில்லை ஜோ... வழக்கில் இறுதி தீர்ப்பு வந்தால்தான் முழு விபரமும் தெரியும். அதிகபட்சமாக "திட்டமிடாத கொலை" என்ற அளவில் எடுத்துச்செல்லப்படலாம். எது எப்படியிருப்பினும் ஒரு அடையாளத்துக்காகவாவது மிக அதிக பட்ச தண்டனை முதல் குற்றவாளிகளுக்கு மட்டுமாவது கிடைப்பது நம் சமூகத்துக்கு மிகவும் அவசியம். பார்ப்போம்.
 



//அது இருக்கட்டும், இப்போது பதிவின் முக்கிய விஷயத்துக்கு வருவோம். கருணாநிதி முதல் மந்திரியாக இருந்த போது நடந்த நிகழ்ச்சிதானே அது. சட்டுபுட்டென்று வழக்கை ஏன் முடிக்கவில்லை? அதன் பிறகு ஜெ வந்து ஐந்து வருடத்தை தன் சொந்த நலனுக்காக திசை திருப்பியுள்ளார். இப்போது என்ன நடக்கிறது? மறுபடி கருணாநிதி வந்து விட்டாரல்லவா? என்னதான் செய்கிறார்?//

பார்ப்பனர்கள் காலத்துக்கும் திருந்த மாட்டார்கள் என்பதற்கு டோண்டு சார் அவர்களின் இந்த விஷப் பின்னூட்டமே தகுந்த எடுத்துக்காட்டு.
 



Update :: தினமலர் கடைசி செய்திகள்

1. தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு : 3 குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை

சேலம் : தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளான ரவீந்திரன், முனியப்பன், நெடுஞ்செழியனுக்கு துõக்கு தண்டனை வழங்கி சேலம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. மற்ற 25 பேருக்கும் 7 ஆண்டு 3 மாதம் சிறை தண்டனையும், 13 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
 



//பார்ப்பனர்கள் காலத்துக்கும் திருந்த மாட்டார்கள் என்பதற்கு டோண்டு சார் அவர்களின் இந்த விஷப் பின்னூட்டமே தகுந்த எடுத்துக்காட்டு.//

யோவ் நீ முதல்ல திருந்தற வழியை பாரு, நீர் என்ன இணைய தாசில்தாரா?
 



//யோவ் நீ முதல்ல திருந்தற வழியை பாரு, நீர் என்ன இணைய தாசில்தாரா?//

இதோ இன்னொரு கோழை பார்ப்பான் :-D :-D :-D
 



தர்மபுரி பஸ் எரிப்பு-3 அதிமுகவினரின் தூக்கு தண்டனையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம் ::

தர்மபுரி: தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் குற்றவாளிகளான 3 அதிமுகவினருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை இன்று சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

கடந்த பிப்ரவரி 2000ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவிற்கு எதிரான கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் ஊழல் வழக்கில் தண்டனை கொடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.

தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி வழியாக வந்த கோவை வேளாண்மை பல்கலைக்கழக மாணவிகளின் பஸ்சுக்கு அதிமுகவினர் தீ வைத்தனர். இதில் கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி ஆகிய 3 மாணவிகள் உயிரோடு எரிந்து கருகி பலியானார்கள்.

இந்த வழக்கில் முதலில் அதிமுகவினரை போலீசார் கைது செய்யவில்லை. கடும் எதிர்ப்பு கிளம்பவே 31 அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர். ஆனால், தர்மபுரி நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கு விசாரணையை முடக்க ஆளும் தரப்பில் தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டன.

வழக்கையே திசை திருப்பினர் போலீசாரும் அதிமுகவினரும். இதையடுத்து இறந்த கோகிலவாணியின் தந்தை வழக்கை வேறு இடத்திற்கு மாற்றக் கோரினார். அதை ஏற்ற உயர் நீதிமன்றம் அதிமுகவினருக்கும் போலீசாருக்கும் கடும் கண்டனம் தெரிவித்ததோடு வழக்கை சேலத்துக்கு மாற்றியது.

இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது குற்றவாளி ஒருவர் இறந்தார். 2 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இதனால் மீதமுள்ள 28 பேர் மீது விசாரணை நடந்தது.

இதில் 28 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது. இவர்களில் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

(மாணவிகளை எரித்துக் கொன்றபோது இந்த நெடுஞ்செழியன் தர்மபுரி நகர அதிமுக செயலாளராக இருந்தார். மாது என்ற ரவிச்சந்திரன் தர்மபுரி எம்ஜிஆர் இளைஞர் அணி துணைத் தலைவராக இருந்தார். முனியப்பன் புளியம்பட்டி அதிமுக பஞ்சாயத்து தலைவராக இருந்தார்)

இந்தத் தீர்ப்பை 28 பேரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை நீதிபதி முருகேசன், நீதிபதி பெரிய கருப்பையா ஆகியோரைக் கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரித்து வந்தது.

9 மாத விசாரணைக்குப் பின் இன்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பை அளித்தனர். தங்களது தீர்ப்பில் 3 கொலைகாரர்களுக்கும் சேலம் நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டனையை உறுதி செய்ததுடன், இந்த சம்பவத்தில் தொடர்புடைய 25 பேரின் சிறை தண்டனையையும் நீதிபதிகள் உறுதி செய்தனர்.

தீர்ப்பின் முழு விவரம்:

அரசியலில் ஈடுபடுபவர்கள் தங்கள் கட்சிக்கும் கட்சித் தலைமைக்கும் விசுவாசமாக இருப்பதை காட்ட அடிக்கடி போராட்டங்கள் சாலை மறியல்கள் செய்கிறார்கள். சில சமயம் தீ எரிப்பு சம்பவத்திலும் ஈடுபடுகிறார்கள். இதனால் பொதுமக்கள் அடிக்கடி பாதிப்புக்குள்ளாகிறார்கள். இதையெல்லாம் ஏற்கவே முடியாது.

பலியான 3 மாணவிகளும் அறியா பருவத்தினர். அவர்களுக்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பு இல்லை.

தேவையில்லாமல் பஸ்சுக்கு தீ வைத்து எரித்து அவர்கள் 3 பேரையும் கொன்று விட்டனர். அவர்கள் தப்பிவிடாதபடி பஸ்சின் கதவை மூடி தீ வைத்துள்ளனர். 3 மாணவிகள் பலியானதை இந்த நீதிமன்றம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இது திட்டமிட்ட கொலை மாதிரி தான்.

தீயில் கருகிய 3 மாணவிகள் துடிக்க, துடிக்க இறந்ததை நினைக்கும்போது மனம் வேதனைப்படுகிறது, பதபதக்கிறது. இது ஒரு கொடூரமான செயல். இந்த கொடூர செயலுக்கு காரணமானவர்களை மன்னிக்கவே முடியாது.

இதனால்தான் அவர்களுக்கு சேலம் நீதிமன்றம் உரிய தண்டனை வழங்கியுள்ளது. இந்த தண்டனைகளை பெற்றவர்கள் அதை ரத்து செய்யவேண்டும் என்று மேல் முறையீடு செய்துள்ளனர். அவர்களது வாதத்தை ஏற்க இயலாது. இதனால் அவர்களது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டியது அவசியமாகிறது.

குற்றவாளிகளுக்கு எதிராக சாட்சியங்கள் வலுவாக உள்ளன. 123 சாட்சிகள், 242 ஆவணங்கள் குற்றத்தை உறுதிபடுத்துகின்றன.

குற்றவாளிகளின் மேல் முறையீட்டை ஏற்று அவர்களை இந்த வழக்கிலிந்து விடுவித்தால் நீதித்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையே வீணாகிவிடும். எனவே நீதித்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்ற வேண்டியது எங்கள் கடமையாகிறது.

இதனால் இந்த வழக்கை சாதாரணமாக விட்டு விட முடியாது. இவர்களது தண்டனையை குறைக்கவும் முடியாது.

நெடுஞ்செழியன், ரவிச்சந்திரன், முனியப்பன் ஆகிய 3 பேருக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை இந்த நீதிமன்றம் உறுதி செய்கிறது. அவர்கள் தலா ரூ.59,000 அபராதம் கட்டவும் உத்தரவிடுகிறோம்.

அது போல மற்ற 25 பேருக்கும் தலா 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை உறுதிபடுத்தப்படுகிறது. அவர்களும் தலா ரூ. 13,000 அபராதம் செலுத்த வேண்டும் என்றனர் நீதிபதிகள்.

7 ஆண்டு சிறை தண்டனை பெற்றவர்கள் விவரம்:

முத்து என்ற அறிவழகன், ரவி, வி.முருகன், வடிவேல், காவேரி, மாணிக்கம், வீரமணி, உதயகுமார், சம்பத், நஞ்சன் என்ற நஞ்சப்பன், ராஜூ, மணி என்ற கூடலர்மணி, மாதுராமன் (இவர் அரசு போக்குவரத்துக் கழக கண்டக்டர் என்பது குறிப்பிடத்தக்கது), முருகேசன், மணி, மாதையன், செல்வம், செல்வராஜ், தெளலத் பாஷா, வேலாயுதம், வி.பி.முருகன், சண்முகம், சந்திரன், செல்லக்குட்டி ஆகியோர்.

தண்டனை பெற்ற 28 பேருமே அதிமுகவில் பல்வேறு பதவிகளில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 



jan 04, 2008

பஸ் எரிப்பு அதிமுகவினரின் தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு-அரசு உத்தரவு ::

சென்னை: தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 குற்றவாளிகளின் அப்பீல் மனுக்களையும் உச்ச நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பளிக்கும் வரை தூக்கு தண்டனை நிறைவேற்றப்படாது என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று தெரிவித்தது.

இதையடுத்து இந்த மூவருக்கும் வரும் 10ம் தேதி நிறைவேற்றப்படவிருந்த தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்படவுடுள்ளது.

கடந்த பிப்ரவரி 2000ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவிற்கு கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் ஊழல் வழக்கில் தண்டனை கொடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.

அப்போது தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி வழியாக வந்த கோவை வேளாண்மை பல்கலைக்கழக மாணவிகளின் பஸ்சுக்கு அதிமுகவினர் தீ வைத்தனர். இதில் கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி ஆகிய 3 மாணவிகள் உயிரோடு எரிந்து கருகி பலியானார்கள்.

இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் 28 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். இவர்களில் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய முக்கிய குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையும், மற்றவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டையும் விதிக்கப்பட்டது.

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் 3 பேரையும் 2008 ஜனவரி 10ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கில் போடுமாறு சேலம் முதலாவது செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி மாணிக்கம் உத்தரவிட்டதை தொடர்ந்து அவர்களை தூக்கில் போட கோவை சிறையில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் தங்களுக்கு வழங்கிய தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி 3 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த மனு நிலுவையில் இருப்பதால் தூக்கு தண்டனையை 8 வாரத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என மூவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் சார்பில் அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பி.எச்.மனோஜ் பாண்டியனும் (பி.எச்.பாண்டியனின் மகன்), அரசு தரப்பில் டி.குமரேசனும் வாதாடினார்கள்.

அதிமுகவினர் சார்பில் பாண்டியன் வாதாடுகையில், தண்டனையை உறுதி செய்து நீதிமன்றம் கடந்த மாதம் 6ம் தேதி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு நகல் எங்களுக்கு 14ம் தேதி தான் கிடைத்தது. தீர்ப்பை எதிர்த்து 3 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். ஆனால் கிருஸ்துமஸ் விடுமுறை விடப்பட்டதால், 3வது வாரத்தில் தான் உச்ச நீதிமன்றத்தில் இந்த மனு விசாரணைக்கு வரும்.

உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வேளையில் தூக்கில் போட நாள் குறிக்கப்பட்டது தவறானதாகும். வரும் 10ம் தேதி தூக்குத் தண்டனையை நிறைவேற்ற நாள் குறிக்கப்பட்டுள்ளது. எனவே தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க நீதிமன்றம் உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இல்லையேல் 3 பேரின் உயிருக்கு பாதகம் ஏற்படும் என்றார்.

வாதத்தை கேட்ட பின்னர் நீதிபதி டி.முருகேசன் கூறியதாவது, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அப்பீல் செய்யப்படுவதற்கு முன்பாக தண்டனையை நிறுத்தி வைக்க இந்த நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்த பின்னர், இந்த விஷயத்தில் உயர் நீதிமன்றம் தலையிட முடியாது.

சிறை விதிப்படி செஷன்சு நீதிமன்றம், உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னர் வாரண்ட் பிறப்பித்து தண்டையை நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளது. இதில் என்ன தவறு இருக்கிறது. இந்த தண்டனையை நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றத்தை தான் மனுதாரர்கள் சார்பில் அணுக வேண்டும். அங்குதான் இதுகுறித்து அவசர உத்தரவுகளை பெறமுடியும் என்றார்.

இதையடுத்துப் பேசிய பாண்டியன், உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தண்டனையை நிறைவேற்ற தேதி நிர்ணயிக்கப்பட்டது தவறு. உச்ச நீதிமன்றத்தில் இந்த மனு நிராகரிக்கப்பட்டு பின்னர் கவர்னர், ஜனாதிபதியிடம் கருணா மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு அவையும் நிராகரிக்கப்பட்டால் தான் தண்டனையை நிறைவேற்ற முடியும் என்றார்.

இதையடுத்துப் பேசிய நீதிபதி முருகேசன், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து விட்டீர்கள். அங்கு இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது, இந்த நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க அதிகாரம் கிடையாது. இந்த வழக்கு மீண்டும் 4ம் தேதி (இன்று) விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம்.

இது போன்ற சூழ்நிலையில் தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதா. ஏற்கனவே இதுபோன்று உயர்நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளதா. இதற்குரிய ஆதாரங்களை நீதிமன்றத்தில் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்க வேண்டும்.

இதேபோல அரசு தரப்பிலும் தனது கருத்தை இந்த நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றார் நீதிபதி.

இதையடுத்து இன்று இந்த வழக்கு நீதிபதிகள் முருகேசன், பெரியகருப்பையா ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் வழக்கறிஞர் ராஜ இளங்கோ ஒரு பதில் மனு தாக்கல் செய்தார்.

அவர் கூறுகையில், மூன்று குற்றவாளிகளும் அடைக்கப்பட்டுள்ள கோவை சிறையின் கண்காணிப்பாளர் ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதன்படி, இந்த மூவரின் மனுக்கள் மீதும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவை உச்ச நீதிமன்ற பதிவாளருக்கும் அவர் அனுப்பி வைத்துள்ளார். அந்த உத்தரவின் நகலை நான் இந்த நீதிமன்றத்திடம் வழங்குகிறேன் என்று கூறி கோவை சிறை கண்காணிப்பாளர் உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பிய உத்தரவின் பேக்ஸ் நகலை சமர்பித்தார்.

இதையடுத்து தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி மூன்று அதிமுகவினரும் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
 



சரி, உங்க கருத்து ??