<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

பிலிம்ஃபேர் விருதுகள் 2005


கொஞ்ச நாளாய் டயட்டில் இருந்து - இது பத்திய டயட் இல்லை, கோழியும் மீனும்தான் உணவே, ஆனால் சமையல் முறை சவசவ. சவுத் பீச் எனும் இந்த டயட் பற்றி பிறகு - நண்பன் வீட்டுக்கு கறிவிருந்து சாப்பிடப்போய் ப்ரோட்டோகால் படி சாப்பாடு, pictionary, அரட்டை, புறப்பாடு என்பதாக இருந்திருக்க வேண்டியது.. அரட்டை நேரத்தை தீவிர சினிமா ரசிகையான நண்பனுக்காக தியாகம் செய்து பிலிம்பேர் விருதுகள் பார்க்க அர்ப்பணம்... நம்ம வீட்டுலயே சனி டிவி இருக்குன்னு பேருதானே தவிர என்னிக்காவது ராத்தூங்கறதுக்கு முந்தி அரை மணி பாட்டு பாக்கறதோட சரி... சரி, காசு கொடுத்துதான் பாக்கறதில்ல, ஓசியிலயாவது பார்ப்போமேன்னு உக்காந்து பாத்து முடிச்சப்புறம்தான் டைம் வேஸ்ட் ஞானோதயமே வந்தது... ஹைலைட் :: என்னது அந்நியனுக்கு விருதா என்று ஆச்சரியப்பட்ட பின்பே அது 2005க்கான விருது வழங்கும் விழா என்று புரிந்தது.. இன்னும் கொஞ்சமே கொஞ்சம் வெயிட் செய்து 2007ல் இரண்டாயிரத்து ஆறுக்கும் சேர்த்து கொடுத்திருக்கலாம்.

தொகுப்பாளர்கள் விழாவுக்கு வரும்முன்பு ஜவ்வு மிட்டாய் சாப்பிட்டு வந்திருக்க வேண்டும். காம்பியரிங் சகிக்கவில்லை. காம்பியரிங் சடாமகன் என்னவோ சிந்துபாத் நாயகனாம். கடைசியில் டான்ஸ் ஆடும்போது நல்லா இருந்தார்.

சிறந்த கன்னட நடிகை விருது வாங்க வந்தவர் மிகவும் அழகாக இருந்தார். புடவையில் உள்ளே இன்னொரு லேயர் உடை உடுத்திய மாதிரி அவர் உடையில் என்னவோ வித்தியாசம் தெரிந்தது. என்னவென்று சொல்ல தெரியவில்லை... அவர் நடித்த நின்னே பரேலி படம் மட்டும்தான் எல்லா விருதுகளையும் வாங்கியது என்றாலும் கன்னடத்தில் படம் கூட எடுக்கிறார்களா என்ற என் நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது.

பொன்வண்ணன் மனைவி சரண்யா கல்யாணத்துக்கு செல்வது மாதிரி பட்டுப்புடவை, மல்லிகைப்பூ என்று மங்களகரமாக வந்திருந்தார். நம் உடை நம் உடைதான்... அவ்வளவு கூட்டத்திலும் ஒரு தனித்தன்மை, பக்கத்து வீட்டு பெண்மணி மாதிரி ஒரு தோற்றம். நாயகனில் தோன்றி 20 வருஷமாக காத்திருந்து இப்பொழுதுதான் கிடைத்ததாக சொன்னார். தவமாய் தவமிருந்து படத்துக்காக இந்த விருது. ராஜ்கிரணுக்கும் ஒன்று. அவர் சைக்கிளில் போகும் காட்சியை காண்பித்தார்கள். அவரை எப்படி இளமையாக காண்பித்தார்கள்.. படம் பார்க்க வேண்டும்.

சேரனும் இன்னொருவரும் சேர்ந்து விருது வழங்குவார்கள் என்று சொன்னார்கள். ஆனால் ஒரு ஒப்புக்கு கூட சேரன் கூட வந்தவரை விருது வழங்கவோ, அறிவிக்கவோ விடவில்லை.. மிகவும் aggressive ஆக நடந்துகொண்டு பட்டிக்காட்டான் மிட்டாய்க்கடை பழமொழியை ஞாபகப்படுத்திக்கொண்டிருந்தார்.

கமல் கௌதமியுடன் வந்திருந்தார். "ரெண்டு பேர தொரத்தி வுட்டுட்டு மூணாவதா இப்ப கௌதமியா... உருப்படவே மாட்டான்.." என்றார் நண்பரின் மனைவி. "ஏங்க அவன் வாழ்க்கைய அவன் தீர்மானம் பண்ணிக்க கூட உரிமையில்லையா... அது என்னங்க டிவோர்ஸ் ஆனா ஆம்பிளைய மட்டும் திட்டறீங்க" என்றதற்கு முறைத்தார். தமிழ் கலாச்சாரம்.

எல்லோரும் இந்த விருதை இந்தியன் ஆஸ்கர் என்றார்கள். என்ன அடிப்படையில் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. இயக்குனர் கௌதம் விருது வழங்க வந்தவர் என்னவாவது பேச வேண்டும் என்று ஆஸ்கரில் சிறந்த படத்துக்கான விருதுதான் கடைசியில் தருவார்கள் என்று சீரியஸாக விளக்கம் கொடுத்துவிட்டு சென்றார். கேட்கத்தான் ஆளில்லை. விருது எப்படியோ, விருது வழங்கும் விழா ஆஸ்கர் விழாவின் கிட்ட என்ன தூரம் கூட வர முடியாது. விளம்பரம் முடிந்தவுடன் விருது வாங்க வருபவர் யாருன்னு தெரியுமா, பிரும்மாண்டம்னா இவர் இவர்தான் பிரும்மாண்டம் என்று கெக்கே பிக்கே கமெண்ட் அடித்து விளம்பரம் ஓடி விருது வாங்க ஷங்கர் வரும்வரை யூகிக்காமல் இருப்பவர் ம.மா.

என்னிடமிருந்து ரொம்ப நாளா தப்பிச்சி ஓடிக்கிட்டு இருந்தா இந்த பொண்ணு, இன்னிக்கிதான் கிடைச்சா என்றார் ஆஷிஷ் வித்யார்த்தி. அவர் சொன்ன பொண்ணு பிலிம்பேர் விருதில் இருக்கும் பொம்மை. அதை மனிதர் மிகவும் சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு சொன்னது என்னவோ போல் இருந்தது. ஆனால் இதை நாலைந்து பேர் மேற்கோள் காட்டி பேசினார்கள். சிறந்த கன்னட நடிகர் ஒரு படி மேலே போய் இது பொண்ணு மட்டும் இல்லை தாய் என்று கண்டபடி உணர்ச்சிவசப்பட்டார். அவர் பேசிய மழலைத்தமிழ் நன்றாக இருந்தது. ஆனால், இயல்பாகவும் நன்றாகவும் பேசிய நான்கு பேரில் அவரும் ஒருத்தர்.

தெலுங்கு நடிகர் ஆலி தெலுங்கிலேயே பேசியிருக்கலாம். அவருக்கு தமிழ் தெரிகிறது. தமிழிலாவது பேசியிருக்கலாம். ஆங்கிலத்தில் பேச முயற்சிக்கிறேன் என்று பயங்கரமாக படுத்தினார். எதற்கு நம்மாட்கள் இப்படி கொடுமைப்படுத்துகிறார்கள் என்று புரியவில்லை.

துறுதுறுப்புக்கு அஸின்.. ச்சோ ச்வீட்.. அஸினை பார்த்தால் கஜினி அஸின்தான் ஞாபகத்திற்கு வருகிறார். ஒருவேளை அஸின் நடித்து நான் கஜினி மட்டும்தான் பார்த்திருக்கிறேன் என்பதால் இருக்கலாம். சலங்கை ஒலி பார்த்த அன்று மிகவும் தீவிரமாக காதலித்த ஜெயப்ரதாவை இந்த விருது வழங்கும் விழாவில் பார்த்தவுடன் மீண்டும் காதலிக்கலாம் போல் தோன்றியது... ஆனால் சிறந்த கன்னட நடிகை அதற்கு விடவில்லை.

இடையிடையே விளம்பரத்தில் "உங்க ஆட்சியிலதான் ஏழைகள் சிரிக்கிறார்கள்" என்று கூசாமல் ஜல்லியடித்துக்கொண்டிருந்தார்கள். விளம்பரத்தில் கூட கருணாநிதியை தவிர யாரும் சிரிக்கிற மாதிரி தெரியவில்லை.. ஒரு வேளை கருணாநிதி ஏழையோ என்னவோ... ஆமாம், ஒவ்வொரு விளம்பர இடைவேளையிலும் இந்த விளம்பரம் வருகிறதே, இம்மாதிரி ப்ரைம் டைம் நிகழ்ச்சிகளில் இவ்வளவு விளம்பரம் தரும் அளவு தமிழக அரசின் விளம்பரத்துறையிடம் கஜானா இருக்கிறதா?




š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


//இடையிடையே விளம்பரத்தில் "உங்க ஆட்சியிலதான் ஏழைகள் சிரிக்கிறார்கள்" என்று கூசாமல் ஜல்லியடித்துக்கொண்டிருந்தார்கள். விளம்பரத்தில் கூட கருணாநிதியை தவிர யாரும் சிரிக்கிற மாதிரி தெரியவில்லை.. ஒரு வேளை கருணாநிதி ஏழையோ என்னவோ... ஆமாம், ஒவ்வொரு விளம்பர இடைவேளையிலும் இந்த விளம்பரம் வருகிறதே, இம்மாதிரி ப்ரைம் டைம் நிகழ்ச்சிகளில் இவ்வளவு விளம்பரம் தரும் அளவு தமிழக அரசின் விளம்பரத்துறையிடம் கஜானா இருக்கிறதா?
//
முகமுடி ரொம்ப கேள்விகேட்கப்படாது. அவங்க டிவி அவங்க அரசு நீங்க யாரு நடுவுல கேள்வி கேட்க. இன்னும் கொஞ்சம் நாட்களில் தமிழில் டிவி நாடகம் பெயர் இருந்தால், நாடகத்தில் ஒருத்தனுக்கு ஒரு பொண்டாட்டி இருந்தால்... இப்படி பல ஊக்கத்தொகை குடுக்கப்போவதாக பேச்சு.
 



//இடையிடையே விளம்பரத்தில் "உங்க ஆட்சியிலதான் ஏழைகள் சிரிக்கிறார்கள்" என்று கூசாமல் ஜல்லியடித்துக்கொண்டிருந்தார்கள். விளம்பரத்தில் கூட கருணாநிதியை தவிர யாரும் சிரிக்கிற மாதிரி தெரியவில்லை.. ஒரு வேளை கருணாநிதி ஏழையோ என்னவோ... ஆமாம், ஒவ்வொரு விளம்பர இடைவேளையிலும் இந்த விளம்பரம் வருகிறதே, இம்மாதிரி ப்ரைம் டைம் நிகழ்ச்சிகளில் இவ்வளவு விளம்பரம் தரும் அளவு தமிழக அரசின் விளம்பரத்துறையிடம் கஜானா இருக்கிறதா?
//
முகமுடி ரொம்ப கேள்விகேட்கப்படாது. அவங்க டிவி அவங்க அரசு நீங்க யாரு நடுவுல கேள்வி கேட்க. இன்னும் கொஞ்சம் நாட்களில் தமிழில் டிவி நாடகம் பெயர் இருந்தால், நாடகத்தில் ஒருத்தனுக்கு ஒரு பொண்டாட்டி இருந்தால்... இப்படி பல ஊக்கத்தொகை குடுக்கப்போவதாக பேச்சு.
 



விருது நிகழ்ச்சியை "நேரில்' பார்க்காத குறையைத் தீர்த்தது இந்தப் பதிவு.
நன்றி முகமூடி.

டபுள் லேயர் புடவை பற்றி மேல் விவரம் கிடைத்தவுடன்
அறிவிக்கணும், ஆமா.:-)
 



கலக்கல்!

(promotion - 53rd Fairone Filmfare Awards 2005: ஈ - தமிழ் - if ads are not welcome, delete this comment after reading :-)
 



Thanks for the detailed review. I watched the program too. But most of the things you have mentioned occured to stupid me only after I read your post. It sure takes hell a lot of talent to be a succesful blogger!

BTW, the comperes were not doing it live. There wasn't a single shot with them and the stage or audience. Sun TV made up one separately, maybe because the original one was in English. That explains the mediocrity of that presentation!
 



Thanks for the detailed review. I watched the program too. But most of the things you have mentioned occured to stupid me only after I read your post. It sure takes hell a lot of talent to be a succesful blogger!

BTW, the comperes were not doing it live. There wasn't a single shot with them and the stage or audience. Sun TV made up one separately, maybe because the original one was in English. That explains the mediocrity of that presentation!
 



//ஆனா அதுவும் ரஜினி நடித்தபடம்...(ரோஜா, மீனா, செந்தில், ஜனகராஜ் நடித்துயிருப்பாங்க, ரஜினிக்கு ரோஜா, மேனா இரண்டும் பேரும் ஜோடி)//

அந்த படம் பேரு வீரா ;)
 



//துறுதுறுப்புக்கு அஸின்.. ச்சோ ச்வீட்.. அஸினை பார்த்தால் கஜினி அஸின்தான் ஞாபகத்திற்கு வருகிறார். ஒருவேளை அஸின் நடித்து நான் கஜினி மட்டும்தான் பார்த்திருக்கிறேன் என்பதால் இருக்கலாம். சலங்கை ஒலி பார்த்த அன்று மிகவும் தீவிரமாக காதலித்த ஜெயப்ரதாவை இந்த விருது வழங்கும் விழாவில் பார்த்தவுடன் மீண்டும் காதலிக்கலாம் போல் தோன்றியது... ஆனால் சிறந்த கன்னட நடிகை அதற்கு விடவில்லை.

இடையிடையே விளம்பரத்தில் "உங்க ஆட்சியிலதான் ஏழைகள் சிரிக்கிறார்கள்" என்று கூசாமல் ஜல்லியடித்துக்கொண்டிருந்தார்கள். விளம்பரத்தில் கூட கருணாநிதியை தவிர யாரும் சிரிக்கிற மாதிரி தெரியவில்லை.. ஒரு வேளை கருணாநிதி ஏழையோ என்னவோ... ஆமாம், ஒவ்வொரு விளம்பர இடைவேளையிலும் இந்த விளம்பரம் வருகிறதே, இம்மாதிரி ப்ரைம் டைம் நிகழ்ச்சிகளில் இவ்வளவு விளம்பரம் தரும் அளவு தமிழக அரசின் விளம்பரத்துறையிடம் கஜானா இருக்கிறதா?//




நச்!,

நான் சிரித்து வாசித்த பந்திகள்.நானும் ஜெயப்பிரதாவைக் காதிலித்திருக்கிறேன்.அந்தக் கன்னட நடிகையை நாமளும் பார்க்கலாமோ?கொஞ்சம் பிலிம் காட்டினால் என்னவாம்!
 



தலை

பின்னூட்டம் அடிக்கலாம்னு ஆரம்பிச்சு ரொம்ப நீளமா போய் தனிபதிவாவே போட்டுட்டேன்.

மிகவும் நல்ல பதிவு,என் மனதில் நிறைய பிளாஷ்பேக்குகளை வரவைத்த பதிவு.நன்றி தலை

http://holyox.blogspot.com/2006/09/164.html
 



நமிதா என்றொரு மாமிச மலை ஆடியதுதான் சகிக்கவில்லை. 4 பசங்க வேற அதை சுமந்தார்கள். அய்யோ பாவம்! ஒரு விஷயம் கவனித்தீர்களா? யாரும் 'award goes to' என்று கூட சொல்லவில்லை (குஷ்பு தவிர). எல்லாம், பெஸ்ட் மியூஸிக் - தமிழ் - ஹாரிஸ் ஜெயராஜ் - அன்னியன் - என்ற மாதிரி சொன்னார்கள்.
 



என்னடா வெறும் விமரிசனமா இருக்கேன்னு பாத்தா, கடைசில, வெச்சிட்டீங்களே உங்க ஆப்பு!

நேரில் பார்த்த திருப்தி!

நன்றி, முகமூடி!
 



தபரணகதா, பெங்கியல்லி அரளித ஹூவு (அவள் ஒரு தொடர்கதை) முத்தினஹாரா - (கன்னட படங்கள்)
சட்டென்று நினைவுக்கு வந்தவை இவை முடிந்தால் பாருங்கள்
 



நானும் அந்த நிகழ்ச்சியைப் பார்த்தேன். அந்த வருத்தத்தை உங்கள் விமரிசனம் போக்கியது :)
 



நல்லா இருக்கு விமர்சனம். கொஞ்சம் போட்டோ போட்டு தாக்கியிருக்கலாமில்ல.
 



// தமிழில் டிவி நாடகம் பெயர் இருந்தால், நாடகத்தில் ஒருத்தனுக்கு ஒரு பொண்டாட்டி இருந்தால் //

சந்தோஷ்... தமிழில் டிவி நாடகம் பெயர் சரி. ஒருத்தனுக்கு ஒரு பொண்டாட்டி இடிக்குதே... ஒருத்திக்கு ஒருவன் தான் தமிழ் கலாச்சாரம். ஒருத்தனுக்கு பலதாரம் திராவிடத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடுதான். அதனால் அதுக்கெல்லாம் வரிவிலக்கு தர ஆரம்பிச்சா கஜானா காலியாயிடாதா?

*

எலிவால், நான் கன்னடத்துல இருந்து தமிழ் மாற்றம் செய்யப்பட்ட படம் ஒண்ண பாத்தேன்னா, அது ரவிச்சந்திரன் ரஜினி குஷ்பு நடிச்ச படம்தான். நாட்டுக்கொரு நல்லவன் அப்படீன்னு நினைக்கிறேன். குஷ்புவ சண்டை போட வச்சிட்டு குத்து குத்துன்னு ரஜினி சுத்தி சுத்தி வந்து கும்மியடிப்பாரு.. தியேட்டரே கொல்லுன்னு சிரிச்சிச்சி... மறுநாளே அந்த படத்த தியேட்டர விட்டு தூக்கிட்டாங்க..

அப்புறம் இந்த கன்னட சினிமா தயாரிப்பாளருங்க கன்னட உணர்வால துடிச்சி தமிழ் திரைப்படங்களுக்கு தடை போடும்போது "ஏண்டா நீங்களும் நல்ல திறமையா படம் எடுத்தா அது ஓடப்போகுது.. அது எப்பிடிறா இன்னொரு மொழிப்படத்துக்கு தடை போட்டா உங்க படம் தானா ஓடும்னு எதிர்பார்க்கறீங்க" அப்படீன்னு தோணும். அதத்தான் கன்னடத்துல படம் கூட எடுக்கிறாங்களான்னு கேட்டேன் (நம்ம தமிழ் மொழி வெறியர்கள் அடுத்த மொழிக்கு எதிரா போராடும் போது கூட அதே மாதிரிதான் தோணும்)

*

துளசியக்கா.. டபுள் லேயர் புடவை வித்தியாசமானதுதான்.. யாராவது நிகழ்ச்சிய பதிவு செஞ்சி வச்சிருக்காங்களான்னு தெரிஞ்சா அவங்ககிட்ட கிளிப்பிங் கேட்டுப்பார்க்கலாம்.

*

பாபா, விளம்பரத்துல ஒரு ப்ரச்னையும் இல்லை. என் பதிவில்தான் ஏழைகள் சிரிக்கிறார்கள் அப்படீன்னு சொல்லாத வரையில... ஆமா நீங்க இந்த மாதிரி விஷயங்கள DVRல பதிப்பீங்கன்னு கேள்வி.. உங்ககிட்ட கன்னட நடிகை விருது வாங்க போற அந்த சில நிமிடங்கள் இருக்கா?

*

கூத்து, நீங்க சொன்னப்புறம், காம்பியர்கள் ஒட்டு வேலைதான் போல் தோன்றுகிறது... உண்மையின்னா நல்லாவே நடிச்சாங்க.

*

தகவல் உதவிக்கு நன்றி அனானி :)
 



கன்னட நடிகை பட க்ளிப்பிங்கில் எல்லாம் மிகவும் சாதாரணமாகத்தான் இருந்தார் ஸ்ரீரங்கன். ஆனால் விருது வாங்க வந்திருந்தபோது மிகவும் அழகாக இருந்தார். (நேரில் விட ஃபோட்டோஜெனிக்கில் அழகாக தெரிபவர்களுக்குத்தான் ஃபிலிம் இண்டஸ்ட்ரியில் மதிப்பு என்று நினைத்தேன். ஒருவேளை இவர் ப்ரொட்யூசருக்கு சொந்தமா?) யாராவது க்ளிப்பிங் வைத்திருக்கிறார்களா என்று பார்ப்போம்.

*

செல்வன், உங்கள் பதிவை படித்தவுடன் என் கல்லூரியில் நடந்த ஒரு நிகழ்ச்சி ஞாபகம் வருகிறது. அது தனிப்பதிவாக எழுதப்பட வேண்டிய விஷயம். விரைவில் எழுத ஆசை இருக்கிறது. நேரம் கிடைக்க வேண்டும். ஸ்பார்க் கொடுத்தமைக்கு நன்றி.

*

நமிதாவும் மாளவிகாவும் ஆடியபோது நண்பர்கள் வீட்டிலும் "ஒரு டான்ஸ் ஆட எவ்ளோ கஷ்டப்படுறாங்க" என்ற கமெண்ட் வந்தது. இவர்கள் எல்லாம் டான்ஸர்கள் அல்ல என்பது என் அபிப்பிராயாம். முன்பெல்லாம் (கவர்ச்சி) டான்ஸர்கள் என்று தனியாக இருப்பார்கள். நன்றாக ஆடுவார்கள். இப்போது நடிகைகளே டான்ஸர் வேஷமும் க(கா)ட்டி விடுகிறார்கள். இவர்கள் நடிகைகள். சினிமா எனும்போது பல டேக்குகளில் எடுக்கப்படும் ஒரு பாடலுக்கு லைவ்வாக ஆடும்போது கண்டிப்பாக கஷ்டமாகத்தான் இருக்கும். இருந்தாலும் மாஸுக்காக இப்படி நடக்கிறது என்பது என் அபிப்ராயம்.

உடைந்த அறிவிப்புக்கு காரணம், எழுதப்பட்ட வசனம் தவிர யாருக்கும் கோர்வையாக பேச வராதோ? அல்லது தமிழில் அழகாக அறிவித்திருக்கலாம். ஆங்கில பீலா ஒரு காரணமாக இருந்திருக்கும்.

*

SK, ஆப்பு எல்லாம் இல்லீங்க. நீங்க பாத்திருக்கீங்களா அந்த விளம்பரத்த. ஏழைகள் சிரிக்கிறார்கள்.. எப்படிப்பட்ட சிக் ஜோக் இது. அதை ஒவ்வொரு விளம்பர இடைவேளையிலும் ஒளிபரப்பு வேறு. எவ்வளவு லட்சங்களோ... அந்த காசுக்கு உண்மையிலேயே சில ஏழைகளை சிரிக்க வைத்திருக்கலாம். எரிச்சலாக இருந்தது.

*

நன்றி மாதங்கி. கன்னடத்தில் நல்ல படங்கள் இல்லை என்று அர்த்தம் இல்லை.. ராஜ்குமார் பட க்ளிப்பிங் சிலது, மற்றும் கன்னட திரைப்பட உலக கெடுபிடிகளை எல்லாம் பார்த்து சும்மா கிண்டலுக்காக சொல்லப்பட்டது அது.

*

மணியன், // அந்த வருத்தத்தை உங்கள் விமரிசனம் போக்கியது // :)))
 



படத்த தேடணும் இ.கொ.. ஒரு க்ளிப்பிங் தேடறேன். அதோட சுவாரசியமான படம் எதுவும் கிடைச்சா வலையேத்தறேன்.
 



Filmfare function snaps

Movie image - Nenapirali_m.jpg (JPEG Image, 366x200 pixels)

kannada movie's website - nenapirali.com

IndiaGlitz - KANNADA MOVIES - NENAPIRALI GALLERY


-----இந்த மாதிரி விஷயங்கள DVRல பதிப்பீங்கன்னு----

deleted :-| ('ஏழைகள் சிரிக்கிறார்கள்' விளம்பரத்தைத் தவறவிட்டதும் இதே டிவிஆர் உபயம்)
 



அந்த கன்னட நடிகை பேரு வித்யா வெங்கடேஷ் ... கமலோட பஞ்சதந்திரம் படத்துல சின்ன ரோல்ல வந்தாங்கனு ஞாபகம்.
 



இந்த டபுள் லேயர் என்னமோ மனசுலே வந்துக்கிட்டே இருந்துச்சு, என்னவோ
பரிச்சயம் இருக்கறது போல. இப்ப ஞாபகம் வருது. நம்ம கடைக்கு ஸ்டாக்
வாங்க பெங்களுர் போனப்ப ( 3 வருசம் முன்பு) அங்கே அப்பத்தான் அறிமுகமா
வந்துச்சு GM Syntex ரிவர்ஸிபிள் புடவை. மெலிசான புடவைதான். ஆனா
உள்ளே லேயர் தங்க நிறம், வெளியே நீலம். ரெண்டு நிறமாவும் கட்டிக்கலாம்.

நீங்க சொன்னது அநேகமா இந்த வகையக இருக்கலாம்.( அப்பாடா இனி நிம்மதியாத் தூங்குவேன்)

இப்ப அது காக்ரா வுக்கும் வந்துருக்கு.

நான் வாங்கிவந்த புடவையை இங்கே ஒரு வெள்ளைக்காரப்பெண்மணி ஈவினிங்
ட்ரெஸ் தைச்சுக்க வாங்கிக்கிட்டாங்க.
 



நல்ல விமர்சனம் முகமூடி. நான் பாதிதான் பார்த்தேன். எனக்கும், நிகழ்ச்சியைவிட அதிகமாக உறுத்தியது இந்த விளம்பரங்கள்தான். நீங்கள் சொல்வது போல இது ஸிக்காகத் தான் இருந்தது.

//அதனால் அதுக்கெல்லாம் வரிவிலக்கு தர ஆரம்பிச்சா கஜானா காலியாயிடாதா?//

அதுக்கெல்லாம் யாராவது கவலைப்படறாங்கங்கறீங்க?
 



இதப்பாக்கற குடுப்பினை இல்லாம போச்சே எனக்கு..

சூப்பர் பதிவு தலை!

ஆனாலும் நம்ம சினிமா ஆளுங்க பச்சாஸ் இதுல. iifa பார்த்திருக்கீங்களா? அகில உலக இந்தியத் திரைப்பட விருதுகளாம். :))) சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாப்போயிடும் அவங்க விடற அலம்பல பார்த்தா.

அவார்டுக்குத்தான் இப்படின்னு இல்ல. KANK (இப்படி படப்பெயர சுருக்குற கேடு கெட்ட ஐடியாவ எந்த மவராசன் கொடுத்தானோ) க்கும் கிருஷ்ஷுக்கும் என்ன அட்டகாசம் பண்ணாங்க பாத்தீங்கயில்ல. ரீடிப்லேர்ந்து நியூஸ் சேனல் வரைக்கும் கரன் மஹாத்மியம் தான் சதா சர்வகாலமும் பாராயணம்.

அக்கா,
ரிவர்ஸிபிள்னு சொல்லி ஆரெம்கேவில தான் ஆட் போட்டு தாக்குறாங்க. முன்னாடி ஜோதிகா வருவாங்கன்னு நினைக்கிறேன். இப்போ ரிவர்ஸிபிள் பாவாடைனு சொல்லி ஒரு குட்டி பொண்ணு குதிக்குது. குமரன்லயும் பார்த்ததா நினைவு.

//ஒருவேளை அஸின் நடித்து நான் கஜினி மட்டும்தான் பார்த்திருக்கிறேன் என்பதால் இருக்கலாம்.//
எங்கள் தலைவி, வருங்கால பாரதப் பிரதமர் அஸின் அவர்களைப் பற்றிய தங்களின் இந்த கமெண்டை உடனே வாபஸ் பெற வேண்டுமென்று அகில உலக அஸின் ரசிக மகா ஜனங்கள் சபையின் சார்பில் எச்சரிக்கை விடுகிறேன். (சாய்வெழுத்துக்கள் நான் போட்டது: உம்முடைய உள்குத்தும் அதுதானே?)
 



//"உங்க ஆட்சியிலதான் ஏழைகள் சிரிக்கிறார்கள்" என்று கூசாமல் ஜல்லியடித்துக்கொண்டிருந்தார்கள். விளம்பரத்தில் கூட கருணாநிதியை தவிர யாரும் சிரிக்கிற மாதிரி தெரியவில்லை.. ஒரு வேளை கருணாநிதி ஏழையோ என்னவோ... //
ஆகச் சொல்ல வந்ததைச் சொல்லியாச்சு அப்படித் தானே:)))
 



ஆனா ஒரு விசயம் நீங்க கவனிச்சீங்களோ இல்லெயோ, நிகழ்ச்சிக்கு வந்தவங்க எல்லாம் எப்படா முடியும் எப்படா போகணும்னு ஒரு மாதிரி நெளிஞ்சிகிட்டுத்தான் இருந்தாங்க. சங்கர் குடும்பம் மட்டும் குதூகலமா இருந்தது. அவரது குழந்தைகளும்.

தவமாய் தவமிருந்து படத்தை சிறந்தப் படமா அறிவிச்சிருக்கலாம்.

இவர்கள் எதை வைத்து தேர்வு நடத்துறாங்கன்னே புரியமாட்டேங்குது.

இதே போல ஒரு நிகழ்ச்சியில் சல்மான் கான் ஒரு நடனம் ஆடினார். அதில் அவர் மூச்சு வாங்கியதையும், கையையும் காலையும் நடனம் என்றப் பெயரில் தக்கா புக்கா என்று ஆடியதும் ஞாப்கத்திற்கு வருகிறது.
 



இதெல்லாம் பாத்துக்குனு இருக்கிறாங்கோ..சர்தான் நாட்ல நெறைய பேருக்கு வேலை இல்லை போல தெரீது...தலிவர் ரண்டு ஏக்கர் தரிசு நெலம் தாராரு...வாங்கி வித்து காசாக்கி( சாரி ) விவசாயம் பாத்து சிரிக்கப் பாருங்கப்பா ...அத வுட்டுட்டு தலைவர் ஆட்சியில ஏழைங்க சிரிக்கிறாங்களான்னு ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு...

இது..நெலமை சந்தி சிரிக்கிறது அப்படீன்னு கேள்விப்பட்டதில்லை... அந்த சிரிப்பு
 



துளசி. ரிவர்சிபிள் புடைவை வாங்கியாச்சா? நவராத்திரிக்கு??? விலை என்ன தெரியுமா? வெறும்
எழுபதாயிரம் தானாம் :-))

முகமூடியாரே அந்த கன்னட நடிகை பெயர் சுவாதி என்று நினைக்கிறேன்.
ஆனாலும் உங்களுக்கு எல்லாம் பொறுமை அதிகமுங்க. இதையெல்லாம் கண் கொட்டாமல் பார்த்துவிட்டு
திராபை என்று புலம்புகிறீர்களே !!!!!!!!!
 



// "உங்க ஆட்சியிலதான் ஏழைகள் சிரிக்கிறார்கள்" என்று கூசாமல் ஜல்லியடித்துக்கொண்டிருந்தார்கள். விளம்பரத்தில் கூட கருணாநிதியை தவிர யாரும் சிரிக்கிற மாதிரி தெரியவில்லை.. ஒரு வேளை கருணாநிதி ஏழையோ என்னவோ...

ரோம்ப சரி.
இந்தியா ஒளிர்கிறது ஜல்லி மாதிரி தானே இது. அப்போ அது எந்த இந்தியா? ஒரு வேளை அமேரிக்காவில் இருக்கும் நம்மவா வீடும் இந்தியாவோ என்னவோ?
 



//சந்தோஷ்... தமிழில் டிவி நாடகம் பெயர் சரி. ஒருத்தனுக்கு ஒரு பொண்டாட்டி இடிக்குதே... //

முகமுடி இது நாடகத்துக்குத்தான்.

//அதனால் அதுக்கெல்லாம் வரிவிலக்கு தர ஆரம்பிச்சா கஜானா காலியாயிடாதா?
//
காலி ஆகப்போவது தமிழ்நாடு கஜானா தானே நமக்கு என்ன கவலை. எவனோ மாச சம்பளக்காரன் நிரப்ப போறான். காலி பண்றது மட்டும் தான் நம்ம வேலை. அறிவாலய, சன் டிவி பொட்டி ரொம்பினா சரி எவன் எக்கேடு கேட்டா எனக்கு என்ன?
 



என்னங்க உஷா,

நீங்கதான் இப்ப ஊருக்குப் போயிட்டு வந்தவங்க. நீங்க வாங்கியாச்சா? அதைச்
சொல்லுங்க மொதல்லே:-)

நம்ம ராம்ஸ் சொன்னது ஆரெகேவி, குமரன் வகையறா எல்லாம் பட்டு.
நான் மூணு வருசம் முன்னாலே (கடைக்கு) வாங்குனது வெறும் சிந்தெடிக் சில்க்தான்.

அதென்னவோ உஷா, அந்த அம்பதாயிரம் கலர் புடவையும் எனக்கு அவ்வளவாப் பிடிக்கலைப்பா.
விலைக்குச் சொல்லலை. என்னவோ எல்லாக் கலரும் வரணுமுன்னு கட்டம் கட்டமா இருக்கு.
எனக்கு இந்த கட்டம் போட்ட புடவைகள் எப்பவுமே விருப்பம் இல்லை, வைர ஊசி தவிர.

போட்டும், நவராத்ரி வாழ்த்து(க்)கள் அனைவருக்கும் சொல்லிக்கறேன்.

முகமூடி பதிவுலேதான் ஆள் நடமாட்டம் ஜாஸ்தியா இருக்கு. அதனாலே நம்ம வீட்டு கொலுவுக்கு
நீங்க எல்லாரும் வரணுமுன்னு இங்கேயே விண்ணப்பம் போட்டுக்கறேன். முகமூடி நீங்களும்
வாங்க. ( உங்க பதிவுலே விளம்பரமுன்னு நினைக்க மாட்டீங்கன்ற ஒரு நம்பிக்கைதான்)
 



from dinamani..

Jothika - 4 in 1 Saree : RMKV Marriage Silk Pattu « Bala’s Blog: "வேடிஸ் சாய்ஸ்… 4 இன் 1 சாரிஸ்"
 



பாபா, அறுபதாயிரம் சில்லறைதானா :-)

துளசி, நம்ம தலைவர் டிவில விளம்பரம் வரும்பொழுதெல்லாம் "நல்லா இருக்கு இல்லே. வேணா வாங்கிக்கோ" என்று
வயிற்றெரிச்சலை கிளப்புவார். ஹூம்... (பெருமூச்சு)

முகமூடியாரே, தனிவழி பாதை அமைத்ததற்கு மன்னிக்க :-)))))))))
 



இந்தி பேசுவோருக்கு தமிழகத்தில் இடஒதுக்கீடு உண்டு; தமிழ் முற்பட்டோருக்கு இடவிலகல்

அன்புள்ள அய்யா,

தற்போதைய தமிழக அரசின் இடஒதுக்கீடு கொள்கை தமிழ் என்கிற அடிப்படையில் அல்லாமல் வெறும் ஜாதி என்கிற அடிப்படையில் உள்ளது.

நீங்கள் பிற்பட்டோர் பட்டியலை பார்த்தால் தமிழ் தவிற்று பிறமொழிகள் பேசும் ஜாதிகள் உள்ளன.

இதில் இந்தி பேசும் முஸ்லிம்கள், ஸவுராஷ்டிரியர்கள்; தெலுங்கு பேசும் ரெட்டியார்கள்,நாயுடுகள், கன்னடம் பேசும் கவுண்டர்கள் ஆகியோர்க்கெல்லாம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

தமிழ் பிராமிணர்களை அயோக்கியர்கள் என கருதும் தி மு க இந்தி பேசும் வடக்கர்கள் வாக்குகளை பெற இந்தி மொழி தேர்தல் பிரசுரங்களை வெளியிட்டது.

தமிழகத்தில் தமிழ் பிராமணர்கள் தமிழர்கள் அல்ல என பிரச்சாரம் செய்கின்றன ப ம க, தி மு க ஆகியோர்.

கர்ணாநிதிக்கு தமிழ் பிராமணர்கள் வெறுப்பு இந்தி மொழிக்கு மேலானது போலுள்ளது.

எனது வகுப்பில் இந்தி பேசும் மாணாக்கர் விலைக்கொடுத்து OBC சான்றிதழ் வாங்கி அண்ணா பல்கலைக்கழகம் சேர்ந்தார். இந்தி/உருது மட்டும் பேசும் முஸ்லிம் தமிழகத்தில் ஜாதிகள் இடஒதுக்கீடு பெறுகின்றனர்.

சென்னை விமானகத்தில் தமிழ் ஊழியர்கள் அவ்வளவு இல்லை. எல்லாமே இந்தி பேசுபவர்கள் தான்.

தமிழக CBSE பள்ளிகள் இந்தி திணிப்பு தான்.

இந்தி, கன்னடம், தெலுங்கு பேசும் ஜாதிகள் வருக; தமிழ் பிரமாணர் ஒழிக என கொள்கை வைத்துள்ளது தற்போதைய இடஒதுக்கீடு சட்டம்.

கர்நாடகத்தில் கன்னடத்திற்கு பிரதானம் அளிக்கப்படுகிறது. கன்னட பிராமணர் கன்னடர் ஆவார். தமிழகத்தில் தமிழ் பிராமணர் வெளியாள் எனவு இந்தி, உருது, கன்னடம், தெலுங்கு ஜாதிகள் தமிழர்கள் என்கிற பெயரில் இடஒதுக்கீடு வாங்குகின்றனர்.

தமிழக தமிழர்களுக்கா வெறும் ஜாதி கணக்கில் உகுந்தவருக்கா?
 



சரி, உங்க கருத்து ??