<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

தீபாவளியும் பகுத்தறிவும்


என்ன வயசென்று அறிய இயலாத ஒரு வயசிலிருந்து அரும்பு மீசை வளர்ந்த காலகட்டம் வரையிலான தீபாவளி பருவம் நிழலாடுகிறது... தீபாவளிக்கு முன் வரும் ஒன்னாம் தேதி இரவு யாருக்கு ஞாபகம் இருக்குமோ இல்லையோ எனக்கு இருக்கும். அன்றுதான் அப்பாவுக்கு போனஸ் நாள். போனஸ் வந்தால் கண்டிப்பாக பால்கோவாவுடன் இனிப்பு பலகார வகைகள் உண்டு. ஒன்னாம் தேதிக்கு அடுத்த ஞாயிறு தீபாவளி பர்சேஸ். சறுக்கு மரம் விளையாண்டு, ஊசி நூல் கொண்டு தைக்க முடியாத நிலைக்கு கிழிந்தால் தவிர டவுசர் மாற்றப்படாத மிடில் க்ளாஸ் பேமிலியில் ஸ்கூல் யூனிபார்ம் மூணு செட் தவிர புதுத்துணி என்றொரு சமாச்சாரம் கிடைப்பது தீபாவளி தீபாவளிக்குத்தான். சில சமயம் போனஸின் கருணைக்கேற்ப ரெண்டு செட் புதுத்துணியும் கிடைக்கும்.

துணி எடுக்கப்போவதே ஒரு வைபவம்தான். எல்லாரும் சேர்ந்து வெளியே போகும் வருடத்தின் மிகச்சில நாட்களில் அந்த நாளும் ஒன்று. மதிய சாப்பாட்டை சீக்கிரமே சாப்பிட்டுவிட்டு கிளம்பி வீட்டை பூட்டியவுடனே வண்டி ஏதாவது வருகிறதா எனப்பார்ப்பேன் நான். கடைத்தெருவுக்கு 2 கி.மீ இருக்கும்... பெரும்பாலும் நடைதான்... ஸ்டாண்டில் வண்டி எடுப்பது வழக்கம் இல்லை, ரெண்டு மடங்கு கேட்பார்கள்... வெகு அபூர்வமாக வழியில் ரிடர்ன் குதிரை வண்டி தென்பட்டால், பேரம் படிந்தால் வண்டி சவாரி... குதிரை வண்டி வழக்கொழிந்து ஆட்டோ வந்தாலும் பேர வைபவத்தில் ஒன்றும் மாற்றம் இல்லை.

அனைவருக்குமாக துணி எடுத்து முடித்தவுடன் ஓட்டல் சாப்பாடு. ஒன்பதாம் வகுப்பு வரை அந்த ஒரு நாள்தான் ஓட்டல் சாப்பாடு. "வீட்டுலதான் தினம் இட்டிலி தோசை, இங்கயுமா" என்று விதவிதமாக வீட்டில் சுலபமாக செய்யாத வகைகளாக ஆர்டர் செய்யப்படும். "அரைமணி பொறுத்திருந்தா வீட்டில போய் சாப்பிட்டிருக்கலாம். இப்ப ஒரு மாச வாடகை அநியாயமா ஓட்டலுக்கு, இந்த ஆடம்பரம் தேவையா?" என்ற டயலாகும் வீடு வரை கூடவே வருவதை தவிர்க்க பில் பணம் ரகசியமாக செட்டில் செய்யப்படும்.

வீட்டுக்கு வந்து ஜவுளிக்கடையில் எடுத்த துணியை ஒரு முறை மீண்டும் எடுத்துப்பார்ப்பது ஒரு தனி சுகம்... மறுநாள் டைலர் கடை வைபவம்...

"கொஞ்சம் லூஸாவே தைங்க டைலர். எல்லாம் வளர்ற பசங்க"
"அப்பா அந்த படத்துல இருக்கற மாதிரி பாக்கெட் வச்சி தைக்க சொல்லுங்கப்பா"
"அட அதெல்லாம் சரிப்படாதுடா.. ஜிகினா வேலையெல்லாம் இல்லாம ப்ளையினா இருந்தாத்தான் ஒரு டீசண்ட் லுக்கு இருக்கும்"

மற்றபடி தீபாவளிக்கு முதல் நாள் ஆபிஸுக்கு கிளம்பும்போதே சொல்லி அனுப்புவேன்:: சாயங்காலம் வண்டி எடுத்துட்டு வாங்கப்பா.. சாயங்காலம் டி.வி.எஸ்.50 வரும்.. "விடுங்கப்பா நான் வீட்டுக்குள்ள ஏத்தி விட்டுற்றேன்." அப்பா தலை வீட்டுக்குள் மறைந்ததும் சத்தம் கேட்காமல் இருப்பதற்காக வண்டியை தெருமுனை வரை தள்ளிக்கொண்டோ ஓடிப்போய் அதே வேகத்தில் தாவி உக்கார்ந்து க்ளட்சை விட்டால்... ஒரு பெரிய ரவுண்டு... முடிந்தால் நம்ம பிரண்டுங்க வீட்டுக்கு எல்லாம் ஒரு விசிட். சொந்தமாக சைக்கிள் வைத்திருக்கும் அவனுங்ககிட்ட அந்த ஒரு நாள் கூட பீலா விடாட்டி நம்மள மதிக்கவே மாட்டாய்ங்க. அப்படியே ட்யூசனில் நாம லுக்கு விடும் டாவு வீட்டு பக்கத்திலும் ஒரு ரவுண்டு. மத்தாப்பு கித்தாப்பு கொளுத்த வெளியில வராமலா இருப்பா...இருந்தா நம்ம மனசெல்லாம் ஒரு மத்தாப்புத்தான்.. இல்லையின்னா இருக்கவே இருக்கு வீட்டுல புஸ்வானம்.

வீட்டுக்கு வந்தால் பட்டாசு பாக்கெட் ஏற்கனவே பிரிக்கப்பட்டிருக்கும்.. "எங்கடா போயிட்ட இவ்வளவு நேரம்.. இந்த சங்கு சக்கரம், புஸ்வானத்த எல்லாம் இப்பவே கொளுத்தலாம்ல..." அதாவது வெளிச்சம் தரும் பட்டாசுகள் இரவுக்கு, சத்தம் தரும் ஐட்டங்கள் மறுநாள் காலைக்கு என்பது ஒரு கணக்கு... முதல் புஸ்வானம் கொளுத்தியதும் பக்கத்து வீட்டு சீனியும் அவன் தம்பியும் எங்க வீட்டில் இருப்பார்கள். அவர்கள் வீட்டில் காலையில்தான் எல்லா பட்டாசுமே. அதிலும் அவர்கள் வீட்டில் சண்டை வராமல் இருக்க இருவருக்கும் சரிசமமாக பட்டாசு பிரிக்கப்பட்டு கொடுக்கப்பட்டிருக்கும்... எங்கள் வீட்டிலும் அப்படி பிரிக்க சொன்னால், முதுகில்தான் பட்டாசு வெடிக்கும். எப்படி இருந்தாலும் டகால்ட்டி வேலை செய்து நாந்தான் நிறைய வெடிக்கப்போகிறேன். அதனால் ஒரு ப்ரச்னையும் இல்லை. நாலு புஸ்வானம் கொளுத்திவிட்டு திரும்பிப்பார்த்தால் சீனியும் அவன் தம்பியும் எங்கள் வீட்டு பட்டாசுகளை கொளுத்திக்கொண்டிருப்பார்கள்... எனக்கு கடுப்பாக இருக்கும்.
"அவங்க வீட்டில்தான் அவங்களுக்கு வாங்கித்தந்திருக்காங்கல்ல. அத அவனுங்க எனக்கு தரானுங்களா. இவரு மாத்திரம் எதுக்கு அவங்களுக்கு தராரு?"
"யாரு கொளுத்தினா என்னாடா, வெளிச்சம் ஒரே மாதிரிதான வருது. இதுக்கெல்லாம் சுணங்காத போயி சந்தோசமா இரு. உங்கிட்ட பேசினா இங்க பூந்தி கெட்டியாயிடும் ஓடு ஓடு"

பட்டாசு எல்லாம் நன்றாக வெடிக்க வேண்டி, அதையெல்லாம் ஒரு பெரிய பித்தளை தட்டில் போட்டு தணல் பிடுங்கப்பட்ட அடுப்பின் மேல் வைத்துவிட்டு படுத்தால் அன்றிரவு தூக்கமே இருக்காது. எப்ப தூங்கினோம் என்றே தெரியாத நிலையில் "எந்திரிங்க எந்திரிங்க ஹேப்பி தீபாவளி..."

இருள் பிரியாத அதிகாலை நேரத்தில் மங்கலான 60W குண்டு பல்பு வெளிச்சத்தில் நடுக்கும் குளிரில் எண்ணெய் வைகப்படும் போது இருக்கும் ஜிலீர், பித்தளை அண்டாவில் விளாவிய சுடுதண்ணீரின் வெதுவெதுப்பான இளம் சூடு, புலி மார்க் சீயக்காய் பொடி இரண்டாம் முறை போடுகையில் ஏற்படும் நுரை ஏற்கனவே கழுத்தில் இருக்கும் மெடிமிக்ஸோடு கலக்கும் போது ஏற்படும் அந்த வாசனை என்று எல்லாமே இன்றும் நினைவில் இருக்கிறது. எல்லாம் முடிந்து எப்படா அப்பா வந்து புதுத்துணி எடுத்துக்கொடுப்பார், பட்டாசு வெடிக்கலாம் என்று காத்திருக்கும் அந்த நேர படபடப்பு ஜாப் இன்டர்வியூவில் கூட கிடைத்ததில்லை.

பட்டாசை அடுக்கி வைப்பது நம்ம வேலை. சாமி கும்பிட்டு முடித்ததுதான் ஞாபகம் இருக்கும் துணி மாறியிருக்கும். ஊதுவத்தி ரெடியாயிருக்கும். டேய் இருடா ஒரு ஸ்வீட்ட வாயில போட்டுட்டு போ என்பதெல்லாம் காதிலேயே விழாது. சிவா அதுக்குள்ள ஆரம்பிச்சிருப்பான் கச்சேரியை. நாங்க மாத்தி மாத்தி போட்டுத்தாக்கும் போது எதிர் வீட்டு மாடியில் ஃபிகர் சாட்டை பிடித்துக்கொண்டிருப்பது ஓரக்கண்ணில் தெரிந்தால் பிஜிலி க்ராக்கர்ஸை கையாலேயே வீசி எறிய, அது பதறுவது தெரிந்தால்... ஆஹா இதுக்காக லஷ்மி வெடியவே போடலாமே...

இந்த சமயத்தில் எல்லார் வீட்டிலிருந்தும் பலகார பரிமாற்றம் ஆரம்பித்திருக்கும். பல பெண்கள் சீர்வரிசை கணக்காக தட்டோடு நடப்பார்கள். அவர்களுக்காக ஜென்டில்மென் ஸ்டைல் வெடிப்பு வைபவம். பட்டாசெல்லாம் முடிந்தவுடன் வீட்டு முன்னால் கிடக்கும் தாளை குமித்து ஒரு பெருமித ஷோ நடக்கும். அப்புறம் புஸ்ஸு கொளுத்தும் படலம். வெடிக்காத பட்டாசையெல்லாம் பொறுக்கி அதனுள் இருக்கும் மருந்தை ஒரு பெரிய தாளில் வைத்து அதனை பற்ற வைத்தால் அணுகுண்டு போட்டால் வரும் மஷ்ரூம் கணக்காய் புகை வரும். அதிக பட்ச புகை யாருக்கு வருகிறதோ அன்று அவந்தான் ஹீரோ.. அதற்காக புது பட்டாசெல்லாம் கூடாது. ஒன்லி பொய்த்துப்போன பொறுக்கிய பட்டாசுகள்தான்.

இப்போ கோவிலுக்கு போகும் நேரம். அப்போதெல்லாம் கேபிள் டிவி என்றொரு சமாச்சாரம் வந்திருக்கவில்லை. ஆகவே எல்லாரும் கோயிலுக்கு வருவார்கள். கோவிலில் முதல் 10 நிமிசம் நிச்சயமாக பய பக்தியுடந்தான் இருந்தேன் என்று ஞாபகம். அதற்கப்புறம்... தலைக்கு குளித்து புதுத்துணியுடன் பார்த்தும் பார்ககாமல் போல் அவள்கள் கோவிலில் சுற்றி வர, இடையில் பார்வை பரிமாற்றங்கள் நடந்ததெல்லாம் மறக்கக்கூடிய சமாச்சாரங்களா என்ன. நிம்மி இப்போது எங்கிருக்கிறாள் என்று விசாரிக்க வேண்டும்.

இன்று வீக்கெண்டில் mall செல்லும் போதெல்லாம் தோன்றினால் புதுத்துணி வாங்குவதால் தீபாவளிக்கென்று தனியாக துணி வாங்க வேண்டும் என்ற நினைப்பு கூட இருப்பதில்லை... ஊரிலிருந்து "ஏண்டா காசக்கரியாக்குற, காசு மதிப்பு உனக்கு கொஞ்சமாவது தெரியுதா" என்று திட்டு வாங்கும் அளவு பட்டாசு வெடிக்கணும் என்று ஒரு ஆசை வருகிறது... தீபாவளி அன்று வீட்டுக்கு போன் போட்டு

"அட நம்ம தெருவுல கூட எவனோ 1000 வாலா வெடிக்கிறான் போலருக்கு"
"ஆமாம் ஆட்டோக்காரர் இருந்தாரே 3ம் வீடு அங்க புதுசா குடி வந்திருக்கவங்க வீட்டு பையந்தான்"
"இருக்கட்டும் இருக்கட்டும்"...

அவ்வளவுதான் தீபாவளி.

நினனத்துப்பார்த்தால் சின்ன வயது மிடில் க்ளாஸ் தீபாவளி சந்தோஷங்கள் ஒரு பொக்கிஷம் போல் தோன்றுகிறது... நல்ல வேளையாக

அ) நரகாசூரனின் இனத்தாரான திராவிட மக்கள் ஏன் தீபாவளி கொண்டாட வேண்டும்..
ஆ) தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம்..
இ) ஒன்றையும் யோசிக்காமல் பார்ப்பனன் எழுதி வைத்தான் என்பதற்காகவும், சொல்கிறான் என்பதற்காகவும், நடுஜாமத்தில் எழுந்து கொண்டு குளிப்பதும், புதுத்துணி உடுத்துவதும், பட்டாசு சுடுவதும், அந்தப் பார்ப்பனர்கள் வந்து பார்த்து, கங்காஸ்நானம் ஆயிற்றா? என்று கேட்பதும், நாம் 'ஆமாம்” என்று சொல்லிக் கும்பிட்டுக் காசு கொடுப்பதும், அவன் காசை வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு போவதும் பகுத்தறிவுக்கு ஒப்புமை பெற்ற விஷயமா?
ஈ) இக்கதை எழுதின காலத்தில் (ஆரியர்) பார்ப்பனர்கள் எவ்வளவு காட்டு மிராண்டிகளாக இருந்திருக்க வேண்டும்?அந்தக் காலத்தில் நாம் மோசம் போய்விட்டோம். அறிவியல் பெருகிவிட்ட இந்தக் காலத்திலும் மோசம் போகலாமா?


என்றெல்லாம் பெரியவர்கள் சொன்னால் பெருமாள் சொன்னதுபோல என்று கண்மூடித்தனமாக யோசித்து, அதை கெடுக்காமல் இருந்தாரே அப்பா என்று தோன்றுகிறது...



š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


Malarum Ninaivugala... Enjoy Pannunga.. Happy Diwali.

Nimmi ippo avanga veetula Boondhi sutrutrukaratha ragasiya AGENTunga solranga......
 



//நினனத்துப்பார்த்தால் சின்ன வயது மிடில் க்ளாஸ் தீபாவளி சந்தோஷங்கள் ஒரு பொக்கிஷம் போல் தோன்றுகிறது//
அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்
அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்.... ஹ¥ம்!
 



//எதிர் வீட்டு மாடியில் ஃபிகர் சாட்டை பிடித்துக்கொண்டிருப்பது ஓரக்கண்ணில் தெரிந்தால் பிஜிலி க்ராக்கர்ஸை கையாலேயே வீசி எறிய, அது பதறுவது ஓரக்கண்ணில் தெரிந்தால்... ஆஹா இதுக்காக லஷ்மி வெடியவே போடலாமே...//

இது..இது..முகமூடி.
 



எங்க வீட்ல தீபாவளி இல்ல, கிறீஸ்துமஸ்.

ஆனால் அனுபவங்கள் ஒன்றுதான்.

அப்படியே என் வீட்டு வீடியோ பதிவைப் பார்த்ததுபோலிருந்தது.

தீபாவளி வாழ்த்துக்களை என் 'என்னுலகம்' மற்றும் 'என்கதையுலகம்' பதிவுகளில் இட்டிருக்கிறேன்.

இருப்பினும் இங்கும்

"தீபாவளி நல் வாழ்த்துக்கள்"
 



என்னமோ 'பினாத்தற' மாதிரி இருக்கே?

சரி சரி, பண்டிகை நாளும் அதுவுமா நான் ஏன் பத்த வைக்கணும்?

முகமூடிக்கு உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்.
 



தீபாவளி நல் வாழ்த்துக்கள்
 



yesterdays (yester years?) are always sweeter...
 



பமக தலைவரே,

சூப்பர் விஷயத்தில் நம்மிடையே மனக்கசப்பு இருப்பினும் 'மறப்போம்! மன்னிப்போம்' என்ற தமிழ் மரபின் வழி...
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

கட்சித் தோழர்களுக்கு வாழ்த்து அறிக்கை கொடுக்க வேணாமா? இப்படி நோஸ்டால்ஜியாவுக்கு போய்ட்டீங்களே. :)
 



//நினனத்துப்பார்த்தால் சின்ன வயது மிடில் க்ளாஸ் தீபாவளி சந்தோஷங்கள் ஒரு பொக்கிஷம் போல் தோன்றுகிறது//

கலக்கல் நினைவலைகள் முகமூடி! படிக்க படிக்க மனசுக்கு நிறைவாய் இருக்கு... 15 வருசம் முன்னாடி எங்க ஊட்டுல நடந்ததைப்போலவே! அந்த சைட் அடிக்கறது உட்பட.. :)
 



//பட்டாசெல்லாம் முடிந்தவுடன் வீட்டு முன்னால் கிடக்கும் தாளை குமித்து ஒரு பெருமித ஷோ நடக்கும்.//

நானும் என் அண்ணனும் பந்தா காட்டுவதற்காகவே சும்மா நியூஸ் பேப்பரைக் கிழித்து,கொஞ்சம் எரித்து பெரிய பட்டாசுக் குவியலாகா படம் காட்டி பந்தா பண்ணிய்ருக்கிறோம்.
ம்..ம்... அது ஒரு கனாக் காலம்.

பழைய நினைவுகளை நல்லா எழுதி இருக்கீங்க.

தீபாவளி வாழ்த்துக்கள்
 



Go to http://www.bradshawfoundation.com/

and click on "Journey of Mankind".

You can scientifically proven facts about how man migrated and how he settled from Africa etc.

97% of the Indian population belongs to the same gene pool.

Such blogs are imbecile in nature and are devoid of facts.
 



ramesh, ramachandranusha, ராம்கி, டி.பி.ஆர். ஜோசஃப், அனானி1, ஜோ, dharumi, இராமநாதன், இளவஞ்சி, கல்வெட்டு, அனானி2 :: உங்கள் அனைவரின் இல்லங்களிலும் விழாக்கால மகிழ்ச்சியும் உற்சாகமும் பொங்கிப்பரவிட மனதார வாழ்த்துகிறேன்.

இராமநாதன், சூப்பர் விஷயத்தில் நமக்குள்ள என்ன மனக்கசப்பு. நான் தமிழ் டமாரம் நாளிதழில் வந்த செய்தியை அல்லவோ வழிமொழிந்தேன். அந்த செய்திக்கும் எனக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்ற டிஸ்க்ளெய்மர் கொடுக்க மறந்தது நான் செய்த தப்புத்தான். அதுக்காக இப்படியா... :-))

இளவஞ்சி, 15 வருடங்கள் முன்னாடியா? அப்படீன்னா நீங்க எனக்கு பெரிய பெரியண்ணன் முறை வேணும். எனக்கு எல்லாமே நேத்தி நடந்தது ;-))

கல்வெட்டு நானும் நியூஸ் பேப்பர் கொளுத்திய கோஷ்டிதான்.. கட்சி தலைவர் ஆனப்புறம் என்னத்துக்கு கொளுத்தியதை எல்லாம் வெளில சொல்லிக்கிட்டுன்னுதான்... ஹிஹி...
 



அனானி 2,

நீங்கள் தந்த சுட்டிக்கு சென்று பார்த்தேன். நிறைய விஷயம் இருக்கிறது. பொறுமையாக படிக்க விருப்பம். (ஜஸ்ட் புது விஷயம் தெரிந்து கொள்ள... மற்றபடி ஆரிய திராவிட குழப்பங்களின் ஆழத்திற்கு சென்று சின்ன சின்ன சந்தோஷங்களை இழக்க வேண்டுமா என்பதே என் கேள்வி) இதற்கு devoid of facts காரர்கள் என்ன சொல்லப்போகிறார்கள் என்று அறியவும் ஆசை. சுட்டிக்கு நன்றி. உங்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்.
 



முகமூடி,

நினைவலைகள் பிரமாதம். என்னதான் சொன்னாலும், நினைவுகளைக் கிளறி ஆழ்ந்து போவதில் உள்ள சந்தோஷம் எதிலும் கிடையாது என்பது என் கருத்து.

நேரமிருந்தால் இதைப் படியுங்கள். நீண்ட நாள்களுக்கு முன்பு மரத்தடியில் எழுதியது.

http://agaramuthala.blogspot.com/2004/11/blog-post.html

உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் தீபாவளி நல் வாழ்த்துகள்.
 



சுந்தர் உங்கள் பதிவை படித்தேன். ஆச்சர்யம். உங்கள் நண்பர்களை தவிர மிச்ச சமாச்சாரங்கள் முக்கால்வாசி இங்கும் நடந்ததுதான். வெடி சமாச்சாரங்களை விரிவாக எழுதினால் பதிவு நீளமாக ஆகிவிடுமே என்று தவிர்த்தேன். நீங்கள் மிகவும் விபரமாகவே எழுதியிருக்கிறீர்கள்.

தீபாவளி நல் வாழ்த்துகள்.
 



முகமூடி, உங்க வீட்டுக்கு பக்கத்தில் உள்ள பாயை மறந்திட்டீங்களே? அவங்களுக்கு நீங்க கொடுத்த பலகாரத்தைப்பத்தியெல்லாம் சொல்லவே இல்லை? அப்பறம், உங்க இரண்டு தம்பிகள் எப்படி இருக்கிறாங்க?
 



// உங்க வீட்டுக்கு பக்கத்தில் உள்ள பாயை மறந்திட்டீங்களே? //

அதெல்லாம் செக்கூலரிஸ்டு முகமூடி போடறப்ப சொல்லிக்கலாம்.

ஆமா என்ன ஆருன்னு நினைச்சி பேசிகிட்டு இருக்கீக?? நான் அவரில்லை (இன்னும் எத்தனை தடவ இதச்சொல்லணுமோ)
 



ராமச்சந்திரன், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

மக்கள் சந்தோஷமாக இருக்கும் மிகச்சில விஷயங்களிலும் // திராவிட/பார்ப்பன பிரச்சினையை இழுக்கத்தான் வேண்டுமா? //

என்று நானும் அதே கேள்வியைத்தான் கேட்டிருக்கிறேன் கடைசி பத்தியில்
 



// திராவிட/பார்ப்பன பிரச்சினையாளர்களின் வாதம் சரியா? தவறா? என்பதை வேறொர் இடத்தில் பேசியிருக்கலாமே! //

பேசியிருக்கலாம்தான், ஆனால் உண்மை என்னவென்றால் இந்த பதிவை எழுதுவதற்கே "மக்கள் சந்தோஷமாக இருக்கும் மிகச்சில விஷயங்களிலும் திராவிட/பார்ப்பன பிரச்சினையை இழுக்கத்தான் வேண்டுமா?" என்ற கேள்விதான் ஆதாரம்.

"கூட்டமாக செல்லும் செம்மறியாடுகளும் குஷியாகத்தான் இருக்கின்றன,அதற்காக அவற்றின் செயல் சரியென்றாகுமா?" என்பதை செம்மறிகளின் நிலையில் இருந்து அல்லவா சிந்தித்துப்பார்க்க வேண்டும். ஈராக்கில் மக்கள் சந்தோஷமாக இல்லை என்று கவலைப்பட்டு அவர்களுக்கு சுதந்திரம் வாங்கித்தர போராடும் பெரியண்ணன் நிலைப்பாடுதான் சரி என்று சிலருக்கு தோன்றலாம். ஆனால் பெரியண்ணனுக்கு இந்த வேலை எதற்கு என்பதை கேட்கும் உரிமையாவது எனக்கு உள்ளதா?

திடீரென நமது தலைவருக்கு "தமிழர் திருநாள்" (இது சங்கராந்தி என்ற புனைபெயரில் தெலுங்கர் திருநாள், கன்னடர் திருநாள் என்றும் கொண்டாடப்படுகிறது) மேல் பகுத்தறிவு வருகிறது.. அதாவது உயிரற்ற நிலத்துக்கும், ஐந்தறிவு படைத்த மாடுகளுக்கும் பரிணாமத்தின் உச்சத்தில் இருக்கும் மனிதன் பொங்கல் வைப்பது கேவலமான செயல் என்று சொல்கிறார் என்றால் பகுத்தறிவாளர் நிலைப்பாடு என்ன என்பதை அறிய ஆசை.

மற்றபடி உங்களின் சாத்வீக உட்பிரிவை மிகவும் மதிக்கிறேன்... இந்த பதிவு எழுதிய கையோடு பகுத்தறிவோடு கொண்டாட வேண்டிய பண்டிகைகள் என்று ஒரு பதிவு எழுத நினைத்தேன். எழுதுவேனா இல்லயோ கண்டிப்பாக இதுபற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில் விவாதிப்போம்.
 



முகமூடி,

தீபாவளி நினைவலைகள் அருமை.

நேரம் இருந்தா இதையும் படிச்சுப் பாருங்க.
http://www.maraththadi.com/article.asp?id=2241
 



முகமூடி..எல்லா ஞாபகங்களையும் நல்லா வெளிக் கொண்டு வந்திருக்கீங்க..ஹும்...நானும் மொட்டை மாடியிலே நின்னு வேடிக்கை பார்த்திருக்கேன்...ஆனா உங்களை மாதிரி போன வருஷம் இல்லை!! :-)
 



நம்பி நான் கருணாநிதியை சொல்லவில்லை. இறந்த காலத்தில், அதாவது

தலைவர் "தமிழர் திருநாள்" (இது சங்கராந்தி என்ற புனைபெயரில் தெலுங்கர் திருநாள், கன்னடர் திருநாள் என்றும் கொண்டாடப்படுகிறது) பற்றி பகுத்தறிந்திருக்கிறார் எனக்கொள்வோம்... அதாவது உயிரற்ற நிலத்துக்கும், ஐந்தறிவு படைத்த மாடுகளுக்கும் பரிணாமத்தின் உச்சத்தில் இருக்கும் மனிதன் பொங்கல் வைப்பது கேவலமான செயல் என்று சொல்லியிருந்தால் பகுத்தறிவாளர் நிலைப்பாடு என்ன என்பதை அறிய ஆசை.

என்றிருந்திருக்க வேண்டும்.
 



துளசியக்கா, உங்களுது படிச்சேன். வீட்டுக்கு வீடு வாசப்படிதான் போல. உங்களுக்கு குதிரைன்னா, எனக்கு சைக்கிள் ரிம்மு ;-)) நம்ம வீட்டுல நோம்பி கிடையாது. மத்தபடி நீங்க எழுதுன கறி சமாச்சாரம் படிச்சது "என் ராசாவின் மனசிலே" பார்த்த எஃபக்டு கொடுக்குது போங்க...

****

ரம்யா, மொட்டை மாடியில சும்மா நின்னீங்களா, சாட்டை கொளுத்தி பதறியிருக்கீங்களா... ஹ¤ம் அதெல்லாம் ஒரு காலம்....
 



//** // உங்க வீட்டுக்கு பக்கத்தில் உள்ள பாயை மறந்திட்டீங்களே? //

அதெல்லாம் செக்கூலரிஸ்டு முகமூடி போடறப்ப சொல்லிக்கலாம்.

ஆமா என்ன ஆருன்னு நினைச்சி பேசிகிட்டு இருக்கீக?? நான் அவரில்லை (இன்னும் எத்தனை தடவ இதச்சொல்லணுமோ) **//

உங்களதைப் படிச்சோன்ன எனது பக்கத்து வீட்டு முருகன் (முகமூடி) ஞாபகம்தான் வந்தது. நீங்க அவரா இருக்குமோன்னு நினைத்து கேட்டேன். எதிர்த்த வீட்லக்கூட சீனுன்னு ஒரு பையன் இருந்தான்.
 



முகமூடி அருமையாக எழுதியிருக்கின்றீர்கள். தீபாவளி என்றல்ல எந்தப் பண்டிகையுமே கொண்டாடத்தான். வசந்த விழா கூட நாம் கொண்டாடியிருக்கிறோம். அது தமிழகத்தில் வசந்த காலமும் இருந்த காலம். இப்பொழுது வசந்தம் கசந்து இப்பொழுது கோடையும் பெருங்கோடையும்தானே காலங்கள்.

பண்பாட்டுக் கலப்பு என்பதில் பல குற்றங்கள் தவறுகள் நிச்சயமாக இருந்திருக்கலாம். அதற்காக பண்டிகை என்பதை விட முடியாது. அது குழந்தைகளுக்கானது.

எனக்கும் தீபாவளியை விட பொங்கல் பிடிக்கும். உழவர் திருநாள் என்பதற்காக. மேலும் அதிலுள்ள ஒரு உன்னத தத்துவத்திற்காக. எல்லா உயிர்களுக்கும் சிறப்பு செய்யும் நல்ல பண்பிற்காக. பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும் என்று சொன்ன வள்ளுவன் வாக்கை மெய்ப்பிக்கும் திருவிழா.

அதற்காக தீபாவளி விரோதி அல்ல நான். யாருக்கும் கஷ்டம் கொடுக்காம சந்தோஷமா இருக்க முடிஞ்சா அதுவே போதும். ஆகையால எந்த வேறுபாடு பாக்காமலும் பண்டிகையைக் கொண்டாடுங்கள். அது போதும்.

மதுரையில் நாங்கள் இருந்த பொழுது பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் இஸ்லாமியர்கள். அவர்கள் வீட்டு நோன்பு சமயங்களில் மாலை வேளைகளில் எங்களுக்கும் அவர்கள் உணவு தருவார்கள். தீபாவளி பொங்கலுக்கு நாங்கள் தரும் பலகாரங்களையும் வாங்கிக் கொள்வார்கள். பள்ளியில் பலகாரம் வாங்க மறுத்த நண்பர்களும் உண்டு. சாமிக்கு வெச்சத சாப்பிடக் கூடாதென்று. ஆனால் எல்லோரும் அப்படியல்ல.

என்ன சொல்ல வர்ரேன். பண்டிகையைக் கொண்டாடுங்கள். அது நன்றே.
 



அனானி, வீட்டுக்கு வீடு வாசப்படிங்க... // பக்கத்து வீட்டு முருகன் (முகமூடி) // அதென்ன முருகனுக்கு முகமூடி போட்டுட்டீங்க... அவருக்கு(ம்) முகமூடி பிடிக்குமோ?

***

// பண்டிகை என்பதை விட முடியாது. அது குழந்தைகளுக்கானது. // சரியாச்சொன்னீங்க ராகவன். அது குழந்தைகளுக்கானது இங்கே கிறிஸ்துமஸை கிறிஸ்துவர்கள் பண்டிகை என்றெல்லாம் பார்க்காமல் அதை ஒரு கொண்டாட்டமாக பார்ப்பதே பெரும்பாலான இந்துக்குடும்பங்களுக்கும் வழக்கம். ஏனெனில் ஜீலை 4 சுதந்திர தினத்தில் அரசாங்கம் வைக்கும் வாணவேடிக்கை மட்டும் பார்த்து தீபாவளியை "அது மாதிரி" என்று அறிந்திருக்கும் குழந்தைகளுக்காக... கடைத்தெருவில் சாண்டாவுடன் புகைப்படம், வீட்டில் கிற்ஸ்துமஸ் மர அலங்காரம், கிறிஸ்துமஸ் அன்பளிப்புகள் எல்லாம் மதம் சம்பந்தப்பட்டதல்ல, மகிழ்ச்சி சம்பந்தப்பட்டது. எக்காரணம் கொண்டும் "பெரியவர்கள்" சிந்தனைக்காக அம்மகிழ்ச்சியை கெடுக்கக்கூடாது.

***

// முரன்பாடாய் இருக்கிறதே? // "பகுத்தறிவு"யென்று எவனெவனோ சொல்வதையும் "யோசிக்காமல்" அப்படியே பின்பற்றுவதும் மூட நம்பிக்கையே. "இந்த" மூட நம்பிக்கைகள் கொண்டவர் மற்றவரை "அவர்கள்" போக்கிற்கு விடாமல் அறிவுரை சொல்வதையே கண்மூடித்தனமென சொன்னேன்... உங்கள் கருத்துக்கு நன்றி.
 



ஒரே மூச்சில் 13 நெகட்டிவ் ஓட்டு போட்ட அண்ணாச்சி (அட அல்பமே)
நல்லா தூங்கினீறா ??

;-)))
 



சரி, உங்க கருத்து ??