Wednesday, June 14, 2006

தைத்த கவிதைகள் சில


மெள்ள நகரும்
பேருந்தின் ஜன்னலில்
அவசரமாய் கையேந்தும்
பிச்சைக்காரியின்
இடுப்புக் குழந்தை
டாட்டா காட்டுகிறது
பஸ் பயணிகளுக்கு!

- குழந்தை, பி.பழனிச்சாமி

*

கிணற்றில் குழந்தை
தவறி விழுந்த
சேதி கேட்டு
ஓடி வந்தார்கள்
காடு கழனிகளுக்கு
சென்றவர்கள்!

பதற்றத்துடன்
பரபரப்புடன்
எல்லோரும் தேடினார்கள்
அவரவர் குழந்தைகளை!

தேடல், வெ.கிருஷ்ணவேணி

*

நாமிருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களில்
நாற்காலியில் அமர்ந்திருப்பேன் நான்
அடக்கமாக எனக்குப் பின்னால்
நின்றுகொண்டிருப்பாய் நீ

உன் இனத்துக் கற்புக்கரசிகளைச் சொல்லி
உன்னை மிரட்டுவேன் நான்
என் இனத்து அயோக்கியர்களின் பட்டியல்
தெரிந்தும்
அமைதியாக இருப்பாய் நீ

நீ எனக்கிருப்பதை பிறர் கேட்டாலொழிய
சொல்லிக் கொள்வதில்லை நான்
நான் உனக்கிருப்பதை ஆதாரங்கள் அணிந்து
பறைசாற்றியாக வேண்டும் நீ

எனக்குப் பிறகு என் நினைவுகளோடு
வாழவைக்கிறார்கள் உன்னை
உனக்குப் பிறகு உன் தங்கையோடு
வாழவைக்கிறார்கள் என்னை

- நானும் நீயும், ஜெயபாஸ்கரன்

*

வாழ்ந்து கெட்டவனின்
பரம்பரை வீட்டை
விலை முடிக்கும்போது
உற்றுக்கேள்
கொல்லையில்
சன்னமாக எழும்
பெண்களின் விசும்பலை

- உயிரின் ஒலி, மகுடேசுவரன்

*

விழுங்கிய மீன்
தொண்டையில் குத்துகையில்
உணர்கிறேன்
தூண்டிலின் ரணம்

- வலி, ஜி.ஆர்.விஜய்

*

கடந்து போகும்
ஜோடிக் கால்களின்
பின்னாலெல்லாம்
ஓடி ஓடிக் களைத்து
ஏமாந்து திரும்புகின்றன
அநாதை நாய்க்குட்டிகள்!
செய்யாத உதவிக்கு
வாலாட்டியபடியே!

- பாதசாரிகள் கவனத்திற்கு, வனவை தூரிகா


*

திருவிழாக் கூட்டத்தில்
குழந்தையைத் தொலைத்துவிட்டு
தவிக்கையில்...
சின்ன வயதில்
வீட்டுத் தொழுவத்தில்
தெருநாய் ஈன்ற குட்டிகளை
கோணிப்பையில் திணித்து
ஊருக்கு வெளியே
கள்ளிக்காட்டிலே
கொண்டுபோய் விட்டதெல்லாம்
நினைவுக்கு வருகிறது!

- வதை, ஜி.விஜயலெட்சுமி

*

ஆறாயிரத்துக்கு
விற்றுவிட்ட பிறகும்
ராவோடு ராவாக
புதிய எஜமானனின்
தொழுவத்துக் கயிற்றை
அறுத்துக்கொண்டு
பத்து கிலோமீட்டர்
பயணம் செய்து
மூச்சிரைத்தபடி
வீட்டு வாசலில்
வந்து நிற்கிற
வெள்ளைப் பசுவைப்
பார்க்கும்போது
உறுத்தத்தான் செய்கிறது
தனிக்குடித்தனம்
வந்தவனுக்கு

- குற்ற மனசு, ஜெ.முருகன்

*

முரண்டு பிடிக்கும் ஆட்டை
அடிக்க முயன்ற
என்னைத்
தடுத்தவாறு சொன்னாள்
அம்மா
"அடிக்காதேடா..
அது
கருப்பசாமிக்கு நேர்ந்துவிட்டது"

- முரண், பி.மணிகண்டன்

*

சொக்கத் தங்கம் நூறு பவுன்
ரொக்கப் பணம் ஐம்பதாயிரம்
ஸ்கூட்டர் டிவி என
பட்டியலிடும் பொழுதுதான்
கண்டுகொள்ள முடிந்தது என்னால்
ஆனால்..
கதவு திறக்கும் பொழுதே
கண்டுகொண்டு குரைத்தது
என் வீட்டு நாய்.

- திருடர்கள் ஜாக்கிரதை, தாமிரபரணி

*

தீர்த்தவாரித் திருவிழாவில்
அலங்கரிக்கப்பட்ட
அர்த்தநாரீஸ்வரரின்
பிரமாண்ட திரு உருவத்தை
கழுத்துப் புண்களில்
ரத்தம் வடிய
கண்களில்
நீர் கசிய
இழுத்து வரும்
வண்டி மாடுகளுக்கு
தெரிந்திருக்காது
அவை
எவ்வளவு பாக்கியம்
பெற்றிருக்க வேண்டுமென்பது!

- புண்ணியம், க.பாலவெங்கடேசன்


நன்றி :: முத்திரை கவிதைகள், 17.11.02 ஆனந்த விகடன் இணைப்பு


31 comments:

  1. எல்லாமே நறுக்கென நெஞ்சை தைக்கும் வரிகள் நன்றி முகமூடி பகிர்ந்தமைக்கு.

    உங்களிடம் அந்த தொகுப்பு உள்ளதா?என்னிடமிருந்தது தொலைந்துவிட்டது.இது புத்தகமாக வெளியிடப் பட்டிருக்கிறதா?இருந்தால் தெரிவிக்கவும்.

    நன்றி!

    ReplyDelete
  2. நல்ல தேர்வு முகமூடி...

    அத்தனையும் மனதை தைக்கும் கவிதைகள்தான். ஜெயபாஸ்கரன் கவிதையையும், மகுடேசுவரன் கவிதையையும் வெகுவாக ரசித்தேன்.

    தந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  3. எனக்குத் தெரிந்த ஒரு சகோதரர் எழுதியது 'சிகரெட்' பற்றி
    "இது
    சுடும் என்று தெரிந்தே
    தொடும் நெருப்பு"

    ReplyDelete
  4. உள்குத்து இருக்கா இல்லையா என தெரியவில்லை.:-))

    சரி அதை விடுங்கள்.இந்த கவிதைகளை உங்கள் அனுமதி இன்றி முத்தமிழ் குழுவில் இட்டேன்.வந்த பின்னூட்டங்கள் சொன்ன கருத்து இதோ

    member 1) ஒவ்வொன்றும் அருமை...கவிதை களஞ்சியங்கள்..

    member 2)அனைத்துக் கவிதைகளும் அருமை. எல்லாமே ஏதொ ஒரு விதத்தில் நம்மை பாதிக்கிறது.

    நன்றி செல்வா.
    நன்றி: முகமூடி, விகடன்


    இக்கவிதைகள் பிடித்தக்கவிதைகள் இழையிலும் பதியப்பட்டுள்ளது.

    member 3)முதல் கவிதையில் மெள்ள நகரும் என்று போட்டிருக்கிறது.

    மெல்ல நகரும் - சரியா?
    மெள்ள நகரும் - சரியா?

    இல்லை இரண்டுமே சரியா?

    எனக்கென்னமோ இரண்டும் சரி என்றுத்தான் தோன்றுகிறது.


    member 4) என்னைத்தொட்ட வரிகள் :

    கடந்து போகும்
    ஜோடிக் கால்களின்
    பின்னாலெல்லாம்
    ஓடி ஓடிக் களைத்து
    ஏமாந்து திரும்புகின்றன
    அநாதை நாய்க்குட்டிகள்!
    செய்யாத உதவிக்கு
    வாலாட்டியபடியே!

    இது என் பின்னூட்டம்

    "கண்ணீல் நீர் வர வைத்த கவிதைகள்."
    நன்றி...நன்றி...நன்றி

    ReplyDelete
  5. ARPUTHAMAANA KAVITHAIGAL
    AZHAMAANA ARTHNGAL
    NANRU & NANRI (padhinthu pakirnthamaikku)


    Guru

    ReplyDelete
  6. மகுடேசுவரன்/வனவை தூரிகா/க.பாலவெங்கடேசன் கவிதைகள்
    குறிப்பிடப்படும்படியாக உள்ளன

    ReplyDelete
  7. மிக அருமையான தேர்வு நண்பரே...மகுடேஸ்வரனின் காமகடும்புனல் வாசித்து உள்ளிர்களா..?

    ReplyDelete
  8. "தைத்த கவிதைகள்" சில இட்டு -- மனதைத்
    தைத்துவிட்டீர், முகமூடி -- வாழ்வைப்
    பிய்த்துத் தின்னும் மனிதர் முகம் கண்டும் -- இன்னும்
    பைத்தியம் பிடிக்காமல் வாழ்வதெப்படி? -- இதற்கு
    வைத்தியம் ஏதுமுண்டோ? யாருக்குத் தெரியும்?

    நன்றிகள் பல!

    ReplyDelete
  9. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  10. //

    வாழ்ந்து கெட்டவனின்
    பரம்பரை வீட்டை
    விலை முடிக்கும்போது
    உற்றுக்கேள்
    கொல்லையில்
    சன்னமாக எழும்
    பெண்களின் விசும்பலை

    //

    மகுடேசுவரன் கவிதை is 100% Geniusness.

    Please keep continuing this kind of posts "Master" mugamoodi.
    -Walking Stick

    ReplyDelete
  11. சொல்ல பயமாய்தான் இரூக்கு, நாய் கவிதைதான் பிடிச்சிருக்கு :-)
    அதாவது அநாதை நாய் கவிதை

    ReplyDelete
  12. நல்ல பட்டியல் தான்.. நல்லா இருக்கு..

    ReplyDelete
  13. ப்ரியன், என்னிடம் அந்த தொகுப்பு உள்ளது. 17.11.02 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழுடன் இலவச இணைப்பாக வந்த புத்தகம். சென்ற முறை இந்தியா சென்ற பொழுது பரணில் கண்டு எடுத்து வந்தேன். 75 கவிதைகள் உள்ளன. அதில் எனக்கு மிகவும் பிடித்தவைகளை மட்டும் இங்கு தட்டச்சியிருக்கிறேன். (நல்ல தமிழ் ஆப்டிகல் ரீடிங் சாப்ட்வேர் கிடைத்தால் நன்றாகயிருக்கும்) மீதி கவிதைகளை இந்த வாரயிறுதியில் தட்டச்சி இந்த இடத்திலே வெளியிடுகிறேன். நன்றி.

    *

    நன்றி முத்துகுமரன், சுல்தான், குரு, கார்திக்வேலு, வாக்கிங்ஸ்டிக், பொன்ஸ்.. எல்லாப்புகழும் கவிதைகளின் கர்த்தாக்களுக்கே...

    *

    செல்வன், இன்னும் பலருக்கு இக்கவிதைகளை அறியத்தந்தமைக்கு நன்றி. முத்தமிழ் குழுவை பற்றி ஒரு அறிமுகம் கொடுங்களேன்

    *

    ராம், காமகடும்புனல் வாசித்ததில்லை... ஆன்லைனில் கிடைக்கிறதா? இல்லையெனில் அடுத்த முறை இந்தியா செல்லும்பொழுது பார்க்கிறேன்.

    *
    நன்றி எஸ்.கே.

    // இன்னும் பைத்தியம் பிடிக்காமல் வாழ்வதெப்படி? //
    அதற்கு கவிதகள் பல படி
    தினப்படி

    *

    உஷா, எனக்கு மிகவும் பிடித்தவைகள் போல்டு எழுத்துக்களில்... அதில் அன்பான அந்த குட்டி நாய்களின் கவிதையும் அடக்கம். எங்கள் வீட்டில் ஒரு காலத்தில் ஒரே நேரத்தில் 6 நாய்கள் வைத்திருந்தோம் (என்னை சேர்க்காமல்). எனக்கு நாய்கள் மிகவும் பிடித்த ப்ராணி. வேஷம் போடும் மனிதர்களை நாய்களோடு ஒப்பிட்டு அவைகளை கேவலப்படுத்துவது எனக்கு பிடிக்காத ஒன்று. என்ன செய்வது காலம் காலமாக அப்படியே வழக்கில் வந்து பழகிவிட்டது... இனியாவது மாற்ற(ப்பட)வேண்டும்.

    ReplyDelete
  14. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  15. //செல்வன், இன்னும் பலருக்கு இக்கவிதைகளை அறியத்தந்தமைக்கு நன்றி. முத்தமிழ் குழுவை பற்றி ஒரு அறிமுகம் கொடுங்களேன்//

    முகமூடி

    முத்தமிழ் குழு கூகிளில் இயங்கும் தமிழ் குழுவாகும்.கவிதைகள்,கட்டுரைகள்,இலக்கியம்,சிறுகதை,ஆன்மிகம்,வம்பளப்பு என அனைத்தும் கலந்த குழுவாகும்.210 உறுப்பினர்கள் உள்ளோம்.பல வலைபதிவர்கள் குழும உறுப்பினர்களாக உள்ளனர்.அங்கு தம் படைப்புகளையும் இடுகின்றனர்.

    குழுவின் சுட்டி

    http://groups.google.com/group/muththamiz?hl=en

    செல்வன்

    ReplyDelete
  16. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  17. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  18. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  19. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  20. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  21. // முகமூடி , நீங்கள் தட்டச்சியதில் சில கவிதைகள் பிடித்திருந்தன. நன்றி. //
    நன்றி கார்த்திக்

    *

    SK, திருமலை, அனானி, கார்த்திக்ராமாஸ், பாஸ்டன் பாலா உங்களின் பின்னூட்டங்களை சர்க்கஸ் பதிவுக்கு இடமாற்றம்

    செய்திருக்கிறேன் (கடத்தியிருக்கிறேன்) தொந்தரவுக்கு மன்னிக்கவும்...

    ReplyDelete
  22. /*மீதி கவிதைகளை இந்த வாரயிறுதியில் தட்டச்சி இந்த இடத்திலே வெளியிடுகிறேன். நன்றி.*/

    நன்றி முகமூடி!

    ReplyDelete
  23. உங்கள் எழுத்தால் இழுக்கப்பட்டு வலைப்பூவிற்குள் வந்தவன் [இதையே இன்னும் எத்தனை நாளைக்கு சொல்லப்போகிறாய் எனக் கத்தும் குரல் கேட்கிறது!] என்ற உரிமையில், -ஆறு' இட அன்புடன் அழைக்கிறேன்.
    மதுமிதாவிற்கு இட்ட பதிவைப் படித்ததும் என் எண்ணம் இன்னும் உறுதிப்பட்டது.
    மறுக்காமல் வருவீர்கள் என நம்புகிறேன், எனக்காக!!.



    http://aaththigam.blogspot.com/2006/06/blog-post_17.html

    ReplyDelete
  24. உங்கள் நூலகம் வலைப்பூவில் 75 கவிதைகளும் கிடைத்தன.நன்றி முகமூடி சிரமம் பார்க்காமல் தட்டச்சி வெளியிட்டமைக்கு.

    ReplyDelete
  25. // உங்கள் நூலகம் வலைப்பூவில் 75 கவிதைகளும் கிடைத்தன //

    ப்ரியன், இது மாதிரி நக்கலடித்தால் ஸ்மைலி போடவேண்டும் என்பது வலையுலக மரபு :)))

    எதிர்பாராத பயணங்களால் இந்த வாரயிறுதியில் தட்டச்ச முடியவில்லை... அடுத்த வாரயிறுதிக்குள் அனைத்தையும் வலையேற்றி இங்கு அறிவிக்கிறேன்...

    ReplyDelete
  26. ஐய்யோ நக்கல் இல்லை முகமூடி :( நான் எண்ணிக்கையை கவனிக்கவில்லை :( முதல் கவிதைக்கு பக்கத்தில் 01 என இருந்ததையும் கடைசி கவிதைக்குப் பக்கத்தில் 75 என இருந்ததையும் பார்த்ததும்...எல்லாவற்றையும் தட்டச்சி விட்டார் போல என எண்ணி PDF ஆக மாற்றி அப்புறமாய் படிக்கலாம் என சேமித்து வைத்து விட்டேன்.உங்களின் பதில் பின்னூட்டம் பார்த்ததும்தான் மறுபடி படித்துப்பார்த்தேன் சிலபல கவிதைகளை காணோம்...உண்மையில் நக்கல் இல்லை கவிதைகள் கிடைத்த சந்தோசத்தில் எண்ணிக்கைப் பார்க்காததால் வந்த விளைவு..மன்னிக்க...

    ReplyDelete
  27. hi mugamoodi..i write abt this muththirai kavidhiagal in my blog..thanks sir...if u have time pls read my blog and suggess ur comments..bye

    ReplyDelete
  28. எல்லாமே (பொதுவாக) பிரலமான பத்திரிக்கைகளில் பாராட்டப்பட்ட, எற்கனவே புகழப்பட்ட, நான் அறிந்த - :-) கவிதைகளை நீங்களும் உங்கள் பங்குக்கு புகழ்ந்துள்ளீர்கள். புதிதாக ஏதாவது கிடைக்கும் என்று ஓடி வந்து

    :(

    ஏமாற்றத்துடன்
    பச்சோந்தி.

    ReplyDelete
  29. தலைவா,

    தமிழ்மணத்தில் இப்போ ஓடற விஷயம் இந்த ஆறு விளையாட்டுதான். நானும் ஒரு ஆறு பதிவு போட்டாச்சு.

    நான் கூப்பிட்ட ஆறு பேரில் நீங்களும் உண்டு. வந்து பாருங்க. உங்க பதிவையும் போடுங்க.

    ReplyDelete
  30. ஒவ்வொரு கவிதையும் அருமையாக இருக்கிறது. இப்படி ஒரு நல்ல பதிவைப் போட்ட உங்களுக்கு நன்
    றிகள் பல.
    இக்கவிதைகளின் சிறப்பு படிக்கும்போதே அந்த நிகழ்வு கண்கூடாகிவிடுகிறது.

    அந்த கையாட்டும் குழந்தையும், பெண்களின் நிலையும், வண்டி மாடுகளும், கிணற்றில் விழுந்த குழந்தையும், நியூபார்ன் நாய்க்குட்டிகளும், மீனும், மூச்சிறைக்க வந்த பசுவும் எல்லாமே நிஜம் என்பதால் மனதை என்னவோ செய்கின்றன.

    தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete